உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு செயலியாக டெலிகிராம் செயலி உள்ளது. வாட்ஸ் அப் போன்ற செயலிகளுடன் ஒப்பிடும் போது அதிக உறுப்பினர்களை கொண்ட குழுக்களை நடத்தலாம், பெரிய அளவிலான ஃபைல்களை கூட அனுப்பலாம் என்பதால் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.
டெலிகிராம் செயலி மீது நீண்ட காலமாகவே பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்தியாவில் கூட இந்த செயலி வாயிலாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்து நீட் மறு தேர்வின் போது சில நாட்களுக்கு இந்த செயலியே இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த சூழலில் டெலிகிராம் செயலிக்கு புது சிக்கல் எழுந்துள்ளது.

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான எஃப்.எஸ்.பி( Federal Security Service - FSB ) பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. பாவெல் துரோவ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பான செய்தி பரிமாற்ற வசதிகளை, பயங்கரவாத அமைப்புகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்றவும், ஒருங்கிணைக்கவும் பயன்படுத்துவதாக ரஷ்யா உளவு அமைப்பு கூறுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது டெலிகிராம் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.டெலிகிராம் தனது பயனர்களின் உரையாடல்களுக்கு வழங்கும் End-to-End Encryption எனப்படும் வசதியே இந்த சிக்கலுக்கு காரணமாகும்.
வாட்ஸ் அப் செயலியிலும் கூட இந்த வசதி உள்ளது. அதாவது மெசேஜை அனுப்பும் நபர் மற்றும் அதனை பெறும் நபரால் மட்டுமே அதனை படிக்க முடியும் மூன்றாம் தரப்பில் அதனை தெரிந்து கொள்ள முடியாது அப்படி அதனை ஹேக் செய்ய முயற்சித்தாலும் சிக்கலான கோடிங்களாகவே காட்டும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், புலனாய்வு அமைப்புகளால் இதை கண்காணிக்க முடிவதில்லை என்றும் ரஷ்யா கூறுகிறது.
உக்ரைன் படைகள் ரஷ்யா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்த தகவல் தொடர்பு செயலியாக டெலிகிராமையே பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறது ரஷ்யா. இவற்றை நீக்குமாறு பலமுறை கூறியும் இந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கிறது.
பாவெல் துரோவிற்கும் ரஷ்ய அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் புதியதல்ல. பாவெல் ரஷ்யாவில் பிறந்தவர் தான். பல தகவல் தொடர்பு செயலிகளை உருவாக்கியவர். 2014ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறினார். தனது சமூக ஊடகமான VKontakte தளத்தில் அரசுக்கு எதிரானவர்களின் தரவுகளை பகிர்ந்துகொள்ள மறுத்ததே அவர் வெளியேற காரணமாக இருந்தது. அதன் பிறகுதான் அவர் 'டெலிகிராம்' செயலியை உருவாக்கினார். ரஷ்யா அரசுக்கு எதிரான ஒரு செயலியாக தான் இது தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தான் அவருக்கு ரஷ்யா மீண்டும் நெருக்கடி தந்துள்ளது. பாவெல் துரோவ் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போது உலகளவில் பேசப்படும் விஷயமாக உள்ளது


Click it and Unblock the Notifications

