ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது 100 நாட்களை கடந்து நீடித்து வருகின்றது. இதனால் பல ஆயிரம் அப்பாவி மக்களும், வீரர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இப்படி ஒரு நிலையில் ஏற்கனவே பல அண்டை நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பல தடை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமானது, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியினையே தடை செய்ய போவதாக அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நாடுகள் ரஷ்யாவுக்கு தடை விதித்தால், அது சர்வதேச அளவில் மிகப்பெரியளவில் விலை புரட்சியை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது சில வாரங்களாகவே தொடர்ந்து 120 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
இவ்வளவு ஏற்றுமதியா?
இதற்கிடையில் இன்று வெளியான அறிக்கையின்படி, உக்ரைனில் நடந்து வரும் போரின் முதல் 100 நாட்களில் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி மூலம் 93 பில்லியன் யூரோக்கள் (98 பில்லியன் டாலர்கள்) சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏற்றுமதியில் பெரும் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பெரும் அதிருப்தி
ரஷ்யாவின் வாழ்வாதாரத்தினை அழிக்கும்பொருட்டு, ரஷ்யாவுடனான வர்த்தகத்தினை துண்டிக்குமாறு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த தரவானது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த தரவானது CREAவினை அடிப்படையாக கொண்டது.
தடை திட்டம்
இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தினை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதோடு கேஸ் இறக்குமதியினையும் மூன்றில் இருபங்கு குறைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் சில நாடுகள் அந்த சமயத்தில் எதிர்ப்பும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தரவானது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
நிபுணர்களின் கணிப்பு என்ன?
ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டிருந்தாலும், இது தற்போது அமலில் இல்லை. இது எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட மொத்த ஏற்றுமதியில் 61%, 100 நாட்களில் சுமார் 57 பில்லியன் யூரோக்கள் மதிப்பியான எரிபொருளை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்துள்ளன.
சீனா முதலிடம்
இந்த ஏற்றுமதி லிஸ்டில் முதலிடம் வகிப்பது சீனா தான். சீனா 12.6 பில்லியன் யூரோ மதிப்பிலும், ஜெர்மனி 12.1 பில்லியன் யூரோ மதிப்பிலும், இத்தாலி 7.8 பில்லியன் யூரோ மதிப்பிலும் இறக்குமதி செய்துள்ளன.
ரஷ்யாவின் இந்த ஏற்றுமதி வருவாயில் கச்சா எண்ணெய் மூலம் 46 பில்லியனும், பைப்லைன் கேஸ், அடுத்ததாக எல் என் ஜி (LNG) மற்றும் நிலக்கரி உள்ளிட்டவற்றையும் ஏற்றுமதி செய்து வருவாய் பார்த்துள்ளது.
எப்படி லாபம் பார்த்தது?
உக்ரைன் ரஷ்யா பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்கள் வாங்குவதை பல நாடுகளும் தடை செய்தாலும், விலை அதிகரிப்பால், ரஷ்யா நல்ல வருவாயினை கண்டுள்ளது. இதனால் ரஷ்யா பெரிதும் பிரச்சனையை எதிர்கொள்ள வில்லை என்பதே மறுக்க முடியா உண்மை. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் ரஷ்யாவின் சராசரி ஏற்றுமதி விலையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 60% அதிகரித்துள்ளது.
சமாளித்தது எப்படி?
அதேபோல சில நாடுகள் வாங்குவதை குறைத்திருந்தாலும், சீனா, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வழக்கத்தினை விட கூடுதலாக எண்ணெய் வாங்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் தனது இறக்குமதியினை அதிகரித்து மிகப்பெரிய எல் என் ஜி இறக்குமதியாளராக மாறியுள்ளதாக CREA ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.