இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், விலைவாசி என அனைத்திற்கும் பெரும் தலைவலியாகவும், சுமையாகவும் இருக்கும் கச்சா எண்ணெய்யை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைவான விலையில் ரஷ்யா இந்தியாவிற்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் அடுத்த சில வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் தேவையும், அதன் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யா தனது எண்ணெய் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா உட்படப் பல நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முடிவு செய்தது.
35 டாலர் தள்ளுபடி
இந்தியா - ரஷ்யா மத்தியிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்யா தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுமார் 35 டாலர் தள்ளுபடி விலையில் அளிப்பதாக அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட போர் துவங்குவதற்கு முந்தைய விலையாகும்.
15 மில்லியன் பேரல்
ரஷ்யா இந்த வருடம் மட்டும் இந்தியாவிற்குச் சுமார் 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை இரு நாட்டு அரசுகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
ரஷ்யா இந்தியாவிற்குப் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து 20 முதல் 25 டாலர் வரையில் தள்ளுபடி உடன் அளிப்பதாக முன்பு அறிவித்த நிலையில் தற்போது 35 டாலர் வரையில் தள்ளுபடி அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
ரூபாய் வாயிலாகப் பேமெண்ட்
மேலும் ரஷ்யா, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு ரூபாய் வாயிலாகவும் பேமெண்ட் செலுத்த அனுமதி அளித்துள்ளது. இந்த வாய்ப்பை தற்போது ஏற்றுக்கொள்ளாத இந்தியா யூரோ வாயிலாகப் பேமெண்ட் செய்ய முடிவு செய்துள்ளது. இதேவேளையில் ரஷ்யாவின் மத்திய வங்கியின் பிரத்தியேக பணப் பரிமாற்ற சேவையான SPFS மூலம் ரூபிள் - ரூபாய் வழியில் பேமெண்ட் செய்யவும் ஆலோசனை நடந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே வாங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் ஜூன் மாதம் முதல் வர உள்ள நிலையில், இதைத் தொடர்ந்து அதிகப்படியான ரஷ்யா எண்ணெய் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு வரும், இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.