உலக நாடுகளில் பிட்காயின் போன்ற அனைத்து கிரிப்டோகரன்சி-க்கும், பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு எந்த அளவிற்கு ஆதரவு அளிக்கப்படுகிறதோ அதே அளவிற்கு எதிர்ப்பும் உள்ளது.
ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகள் கிரிப்டோகரன்சியைத் தனது நாணய பரிமாற்றத்தில் முக்கிய அங்கமாக மாறும் அளவிற்குப் பல நாடுகளில் கிரிப்டோகரன்சி ஆதிக்கம் செலுத்தினாலும், பல முன்னணி பொருளாதார நாடுகள் இன்னும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் உள்ளது.
இப்படி கிரிப்டோகரன்சிக்கு பெரிய அளவில் தடை விதித்த நாடுகளில் சீனா-வுக்கு அடுத்தபடியாக தற்போது ரஷ்யா இணைய உள்ளது.
கிரிப்டோகரன்சி-க்குத் தடை
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும் சீனா, கிரிப்டோகரன்சி வர்த்தகம், முதலீடு, உற்பத்தி என அனைத்திற்கும் மொத்தமாகத் தடை விதித்துத் தொடர்ந்து வர்த்தகச் சந்தையில் இருக்கும் சிறிய சிறிய ஓட்டைகளையும் அடைத்து வருகிறது. இதுபோன்று கடுமையான தடைகளைச் சில நாடுகள் மட்டுமே விதித்துள்ள நிலையில் தற்போது இப்பட்டியலில் ரஷ்யா இணைய முடிவு செய்துள்ளது.
ரஷ்ய மத்திய வங்கி
ரஷ்ய மத்திய வங்கி வியாழக்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவின் நிதியியல் நிலைத்தன்மை, மக்களின் நலன் மற்றும் நாணய கொள்கையின் இறையாண்மை ஆகியவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் பொருளாதாரத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக ரஷ்ய நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கும் கொள்கையைத் தாக்கல் செய்துள்ளது.
சீனா- ரஷ்யா
சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் அறிவிக்கப்படும் மிக முக்கியமான தடைகளில் ஒன்றாக ரஷ்யாவின் தடை உத்தரவு பார்க்கப்படுகிறது, இதுநாள் வரையில் டாப் 10 பொருளாதார நாடுகளில் சீனா மட்டுமே கடுமையான தடையை விதித்து இருந்த நிலையில் 11வது இடத்தில் இருக்கும் ரஷ்யா-வின் தடை உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முக்கியக் காரணம்
ரஷ்யா இந்த முக்கியமான முடிவை எடுக்கப் பல ஆண்டுகளாக ஆலோசனை செய்து முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020ல் ரஷ்யா கிரிப்டோகரன்சிக்கு அனுமதி கொடுத்தாலும், தற்போது அதன் மூலம் பணச் சலவை மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி பரிமாற்றம் போன்ற பல ஆபத்துக் காரணிகள் இருப்பதை உணர்ந்து தடை செய்ய முடிவு செய்து அதற்கான கொள்கை அறிக்கையை ரஷ்ய மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளது.
வர்த்தகம், முதலீடு, உற்பத்தி
இது அந்நாட்டின் அரசால் ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் கிரிப்டோகரன்சி வர்த்தகம், முதலீடு, உற்பத்தி ஆகிய அனைத்திற்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்படும். ரஷ்யாவில் வருடத்திற்கு 5 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்யப்படுவதாக ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.