சிட்னி: உலகை தற்காலிகமாக இணைக்கும் கிரிக்கெட் மதத்தில் கடவுள் Sachin Tendulkar எப்போது யார் கோபப்படுத்தினாலும், மிஸ்டர் கூலாகவே தன் வேலையைப் பார்த்துக் கொண்டு ஒதுங்கிச் செல்பவர்.
இப்போது இவரையே கோபப்படுத்தி, ஆஸ்திரேலிய கோர்ட் வாசல் ஏறா வைத்திருக்கிறது ஒரு பேட் தயாரிப்பு நிறுவனம். ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் தான் அந்த துரதிர்ஷ்டசாலி.
இந்த ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்கிற நிறுவனம் நம் Sachin Tendulkar-ன் பெயர், புகைப்படம், லோகோ மற்றும் புரொமோஷன்களை எல்லாம் செய்து கொள்வதாகவும், அதற்கு விலையாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலராவது கொடுப்பதாகவும் 2016-ல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தத்தின் படி "Sachin by Spartan" என்கிற பெயரில் பல விளையாட்டு ஆடைகள், சாதனங்களை எல்லாம் விளம்பரப் படுத்தியது ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல். அதோடு நம் Sachin Tendulkar இந்த நிறுவனத்தின் பல விளம்பரங்களுக்கும், புரொமோஷன்களுக்கும் மும்பை, லண்டன் உட்பட பல நகரங்களுக்கும் பறந்து சென்று சொன்ன படி வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2017 மற்றும் 2018) ஒரு டாலர் கூட நம் Sachin Tendulkar-க்கு வந்து சேரவில்லை. ஆகையால் செப்டம்பர் 2018-ல் "மிஸ்டர் ஸ்பார்டன் நான் பார்த்த வேலைக்கு எனக்கு வந்து சேர வேண்டிய பணம் எங்க..?" எனக் கேட்டிருக்கிறார்.
அதற்கும் பதில் இல்லை. சரி, இனி தன்னுடைய பெயர், புகைப்படம், லோகோ, பழைய புரொமோஷனல் விளம்பரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சொல்லிப் பார்த்திருக்கிறார். ஆனால் ஸ்பார்டன் நிறுவனம், Sachin Tendulkar சொன்னதைக் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை.
ஆகையால் பொறுத்துப் பார்த்த நம் சச்சின் பொங்கி எழுது விட்டார். இப்போது ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் முறையாக எல்லா ஸ்பார்டன் மற்றும் சச்சினுக்கிடையிலான ஒப்பந்தங்கள், ஸ்பார்டன் நிறுவனத்துக்கு முடித்துக் கொடுத்த வேலைகளுக்கான சாட்சிகளோடு வழக்கு தொடுத்துவிட்டார். இந்த வழக்குக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஸ்பார்டன் நிறுவனம் இன்னும் எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை.