சியோல்: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சாம்சங் நிறுவனம் விற்பனையில் 12 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
மொபைல் விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவின் காரணமாக இந்நிறுவனத்தின் வருமான அளவு கடந்த வருடத்தை விட 31 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
சாம்சங்
சர்வதேச சந்தையில் ஜியோமி, ஆப்பிள் போன்ற நிறுவன தயாரிப்புகள் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால், சாம்சங் தயாரிப்பின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. குறிப்பாக ஜியோமியின் கவர்ச்சியான விலை இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
இதன் வெளிப்பாடாகவே கடந்த 5 காலாண்டுகளாகச் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை குறைந்து வருகிறது.
லாபம் அளவீடுகள்
ஜனவரி - மார்ச் காலாண்டில் சாம்சங் நிறுவனத்தின் லாப அளவீடுகள் சந்தை கணிப்புகளான 5.5 டிரில்லியன் வான் என்ற அளவை விட உயர்ந்து 5.9 டிரில்லியன் வானாக (5.4 பில்லியன் டாலர்) என்ற அளவை அடைந்துள்ளது.
31 சதவீதம் சரிவு
இக்காலகட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை அளவு 12 சதவீதம் குறைந்து 43 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் 2014ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் மொத்த வருமானத்தின் அளவில் 31 சதவீதம் சரிந்துள்ளது.
மொபைல் விற்பனை
சாம்சங் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் மூன்றில் 2 பங்கு மொபைல் விற்பனையின் மூலம் கிடைக்கிறது.
சர்வதேச சந்தையில் இந்நிறுவன விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதால் நிறுவனத்தின் நிதிநிலை மோசமான நிலையை அடைந்து வருவதாகச் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்பு
விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதால் புதிய பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்திய சில நாட்களில் அவற்றின் விலையை 20 சதவீதம் வரை குறைக்கிறது சாம்சங்.