இன்று உலகின் பல நிறுவனங்களுக்கு இந்தியா தான் பிரதான சந்தை. ஃபேஸ்புக், வாட்ஸப், டிக் டாக், கூகுள் என பல நிறுவனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதெல்லாம் போக, ஸ்மார்ட்ஃபோன் சந்தையை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் இந்தியாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
2019-ம் ஆண்டில், இந்தியாவில் 152.5 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை ஆனதாம். எனவே தற்போது உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையாக உருவெடுத்து இருக்கிறது.
இது தான் அதிகம்
இந்தியாவில் 200 டாலருக்கு மேல் (14,000 ரூபாய்) ஆனால் 500 டாலருக்குள் (35,000 ரூபாய்க்குள்) விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த 2019-ல் சுமார் 55 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்தியாவில் விற்பனை ஆகும் மொத்த ஸ்மார்ட்ஃபோனில் 19.3 சதவிகித ஸ்மார்ட்ஃபோன்கள் இந்த விலை வரம்பில் இருப்பவைகள் தானாம்.
200 - 500-ல் யார் தாதா
2019-ல் இந்த விலைப் வரம்பில், விவோ தனிப் பெரும் டானாக வலம் அந்து கொண்டிருக்கிறதாம். இந்த விலை வரம்பு சந்தையில் 28 சதவிகித சந்தையை விவோ சோலோவாக வைத்திருக்கிறதாம். விவோவைத் தொடர்ந்து ஒன் பிளஸ் நிறுவனம் 20 % சந்தையை வளைத்துப் பிடித்து இருக்கிறார்களாம்.
500 டாலருக்கு மேல்
பிரீமியம் செக்மெண்ட் என்று அழைக்கப்படும் 500 டாலருக்கு மேல் (35,000 ரூபாய்க்கு மேல்) விலை இருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் 47 சதவிகித சந்தையைப் பிடித்து பாஷாவாக இருக்கிறார்களாம். ஆக இதுவரை சாம்சங் எந்த ஸ்மார்ட்ஃபோன் பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கவில்லை.
ஒட்டு மொத்த சந்தை
இந்தியாவின் ஒட்டு மொத்த ஸ்மார்ட்ஃபோன் சந்தையில், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் சுமார் 28 சதவிகித சந்தையை சியாமி (Xiaomi) தனியாகப் பிடித்து இருக்கிறதாம். ஒட்டு மொத்த ஸ்மார்ட்ஃபோன் பிரிவில், சாம்சங் நிறுவனம் 20 சதவிகித சந்தையை மட்டும் பிடித்து இரண்டாவது இடத்தில் இருப்பதாக CAnalysis என்கிற நிறுவனம் சொல்லி இருக்கிறது.
முதல் முறை
இப்படி சாம்சங், இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஃப்யூச்சர் போன் சந்தையில் முதலிடத்தை பறி கொடுப்பது இதுவே முதல் முறையாம். இனி சாம்சங் என்ன செய்யப் போகிறது. காலப் போக்கில் மைக்ரோமேக்ஸ் போல காணாமல் போகுமா அல்லது சியாமிக்கு இணையாக இறங்கி எதிர்த்துப் போராடுமா..? என கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருந்தன.
நாளை தெரியும்
ஆஸ்கர் விருதுகளின் போது டிவி சேனல் விளம்பரத்தில் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிபார்க்கப்பட்ட Foldable ஸ்மார்ட்போன்களை விளம்பரம் செய்ததாக சி என் பி சி தன் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறது. நாளை (பிப்ரவரி 11, 2020) சாம்சங்கின் "Unpacked" நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்ஃபோன்
இந்த Unpacked நிகழ்ச்சியில் வழக்கமாக சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய ரக ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிடுவார்கள். நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் சாம்சங் தன்னுடைய புதிய Foldable ஸ்மார்ட்ஃபோனை வெளியிடுலாம் என சி என் பி சி தன் செய்தியில் சொல்லி இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்ஃபோனாவது சாம்சங்கின் சரியும் சாம்ராஜ்யத்தை மீண்டும் தூக்கி நிறுத்துமா..?