அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்கா இஸ் பேக் என்று கூறினார் ஜோ பைடன். உண்மையில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்தினை நோக்கில் நகர்த்தும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தென் கொரியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான சாம்சங், அமெரிக்காவில் 17 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்த ஆலையை அமெரிக்காவின் அரிசோனா டெக்சாஸ் அல்லது நியூயார்க்கில் நிறுவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
பல பில்லியன் $ ஒதுக்கீடு செய்ய திட்டம்
இதற்காக பல இடங்களில் இடங்களை ஆராய்ந்து வருவதாகவும், இதனையறிந்தவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதன் சிப் உற்பத்தியினை அதிகரிக்கவும், தைவான், சீனா மற்றும் தென்கொரியா மீதான அதன் நம்பகத்தன்மையை குறைப்பதற்கும், பல பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்வதாக கடந்த ஜனவரியிலேயே அறிவித்தது. எனினும் இந்த நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
1,900 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம்
இதற்கிடையில் தான் சாம்சங்கின் இந்த திட்டம் வந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சாம்சங்கின் இந்த ஆலை நிறுவப்பட்டால் 1,900 பேர் வரை வேலை கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நிறுவ திட்டமிட்டுள்ள இந்த ஆலையானது அக்டோபர் 2022க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் இது போன்ற சலுகை கிடையாது
அமெரிக்கா வரலாற்றில் இது போன்ற சிப் ஆலைகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஆனால் 5ஜி ஸ்மார்ட்போன்கள் முதல் ஜெட் பைட்டர்ஸ் வரையிலான தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான முக்கிய பொருட்கள், விநியோக சங்கிலி பாதிப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க, இது போன்ற அறிவிப்பினைக் கொடுக்க தூண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நல்ல விஷயம் தான்
சாம்சங் நிறுவனம் கடந்த 1990களில் இருந்து ஆஸ்டினில் சிப் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இதனை இன்னும் விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த ஆலைக்கு அருகிலேயே இடம் வாங்கியுள்ளதாக உள்நாட்டு செய்திகள் கூறுகின்றன. எது எப்படியோங்க அதிபராக பதவியேற்றுள்ள பைடனின் வருகைக்கு பின்பு, உண்மையில் அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது என்று தான் கூற வேண்டும். புதிய ஆலைகள், புதிய ஊக்கத்தொகை அறிவிப்பு என பலவும் அமெரிக்காவுக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளன. உண்மையில் இது அமெரிக்காவுக்கு, இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.