சவுதி அரேபிய அரசின் சவுதி அராம்கோ நிறுவனமும், எண்ணெய் வயலும் சில நாட்களுக்கு முன்பு, நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் பலத்த சேதமடைந்ததோடு, இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்தன.
இந்த நிலையில் ஒரு புறம் இதற்கு காரணம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தான் என கூறப்பட்டு வந்தது. ஆனால் மறுபுறம் அமெரிக்காவோ இதற்கு கட்டாயம் ஈரான் தான் காரணமாக இருக்கும் என்றும் கூறி வந்தது.
இந்த நிலையில் இந்த பலத்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என தற்போது சவுதி அரசு தற்போது உறுதி செய்துள்ளது.
சவுதி மீது தாக்குதல்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமான, சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல் மீது கடந்த வாரம் சனிக்கிழமையன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலும் இந்த நிலையில் தினசரி கிட்டதட்ட 10 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்பட்டு வந்த ஆலையில், தாக்குதலால் தினசரி 5.7 மில்லியன் பேரல்கள் மட்டுமே உற்பத்தி செய்வதாக இந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், தீவிர விசாரணைக்கு பின்பே இதை பற்றிக் கூற முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஈரான் தான் இந்த தாக்குதலுக்கு காரணம்
இது குறித்து தற்போது சவுதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம். இதற்கு சாட்சியாக தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்களின் சிதைந்த பாகங்கள் மற்றும் துல்லியம் வாய்ந்த ஏவுகனைகளின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் 18 ஆளில்லா விமானம் மற்றும் 7 துல்லிய ஏவுகனைகளைக் கொண்டு சவுதி அராம்கோவின் எண்ணெய் வயல் மற்றும் எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் சவுதி அரசு கூறியுள்ளது.
ஆயுதங்கள் அனைத்தும் ஈரானுக்கு சொந்தமானவை
ஒரு புறம் ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தாலும், இந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலானது வடக்கு பகுதியில் இருந்து தான் தாக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்த ஆயுதங்கள் அனைத்தும் ஈரானுக்கு சொந்தமானவை என்றும் என தரவுகள் கூறுகின்றன. இதனால் ஈரான் தான் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கலாம் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றது என்றும் சவுதி கூறியுள்ளது. எனினும் இந்த விமானங்கள் எங்கிருந்து ஏவப்பட்டது என்று கூறமுடியாது என்றும், அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் சவுதி தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்த நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசியவர், சவுதி ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இதற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் ஈரான் தான் காரணம் என்றும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்து என்ன நடக்குமோ?
இதற்கு முன்னதாக அமெரிக்கா, சவுதி ஆலையின் இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம், அப்படி ஈரான் தான் காரணம் என்று சவுதி நீருபித்து விட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறிவந்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான், இது பொய் குற்றச்சாட்டு என மறுத்ததோடு, இது தொடர்ந்தால் அமெரிக்காவின் மீதும் போர் தொடுப்போம் என்று எச்சரித்து வந்தது. ஆனால் தற்போது ஈரான் தான் காரணம் என்று சவுதி கூறியுள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
பொருளாதார ரீதியாக பாதிப்பு
ஒரு புறம் அமெரிக்காவுக்கு ஈரானுக்கு பிரச்சனை இருந்து வரும் நிலையில், தற்போது சவுதியிடமும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கியுள்ளது ஈரான். இதனால் இந்த நாடுகள் மட்டும் அல்லாது உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன, ஏற்கனவே அமெரிக்கா சீனா பிரச்சனையால் உலக பொருளாதராமே மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், அமெரிக்கா ஈரான் பிரச்சனையால், மற்ற நாடுகள் யாவும் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அமெரிக்கா கூறியது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப் பாதிக்கப்பட்ட ஈரான், இப்படி ஒரு செயலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு இது பலத்த அடி
ஏற்கனவே அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை இனி என்னவாகும், மொத்த எண்ணெய்யில், 80 சதவிகிதம் இறக்குமதி மதியை மட்டும் நம்பியுள்ள இந்திய போன்ற நாடுகளின் நிலை என்ன? இதனால் இந்தியாவின் பொருளாதாரம் என்னவாகும்? ஏற்கனவே பல பிரச்சனைகளால் பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கு இந்தியா, எண்ணெய் இறக்குமதியால் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளதோடு, பணவீக்கம் எந்த அளவுக்கு போகும் என்றும் கவலை கொள்ள வைக்கிறது. ஏற்கனவே மந்த நிலையில் உள்ள இந்தியாவுக்கு இது மேலும் பெருத்த அடியாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.