இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் பல விதமான வர்த்தகத்தின் மூலம் பணம் சம்பாதித்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கும் சவுதி அரேபியா தனது 80 சதவீத வருமானத்தைக் கச்சா எண்ணெய் வாயிலாக மட்டுமே பெற்று வருகிறது.
இதை மாற்ற வேண்டும் என்ற எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், கச்சா எண்ணெய் மீதான காதல் அவர்களைத் தடுக்கிறது.
இளவரசரின் திட்டம்..
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் தான் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சவுதி இனியும், கச்சா எண்ணெய்-ஐ மட்டும் நம்பி இயங்கக் கூடாது, புதிய வர்த்தகம், புதிய வியாபாரம் மூலம் வருமானத்தை ஈட்ட வேண்டும் எனக் கூறினார்.
இதை 2020க்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் தனது நிர்வாகக் குழுவிற்கு உத்தரவிட்டார். இதற்குக் காரணம் அமெரிக்கா
அமெரிக்கா
அமெரிக்கா உடனான கச்சா எண்ணெய் போட்டியில் சவுதி அளவுக்கு அதிகமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து, விலையை அடிமட்டத்திற்குக் குறைத்து அமெரிக்காவை வீழ்த்த நினைத்தது.
பாதிப்பு
இதில் சவுதி மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்தது, இந்தப் போட்டியின் மூலம் 2015ஆம் ஆண்டுச் சவுதி வரலாறு காணாத வகையில் சுமார் 15 சதவீத நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதிலிருந்து பாடம் கற்றுத் தான் சவுதி புதிய வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் எனத் திட்டம் தீட்டியது.
ஆனால் நடந்தது வேறு.. இதற்கு உதாரணமாக ஒரு இந்தியப் பணத்தின் கதை..!
இந்தியப் பயணம்..
சவுதி அரசு எவ்வளவு தான் திட்டம் தீட்டினாலும், கச்சா எண்ணெய் மீது அவர்களுக்கு உள்ள காதல் என்றும் குறையப்போவது இல்லை.
கடந்த வருடம் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் உருவான போது, சவுதி நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான ARAMCO தலைவர் அவசர அவசரமாகப் பாரீஸ்-இல் இருந்து தனி ஜெட் மூலம் டெல்லியில் இறங்கினார்.
அவசர பயணம்
ஏப்ரல் 11, 2018ஆம் ஆண்டு Aramco தலைவர் அமீன் நாசர் அவர்கள் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி இந்தியா வந்தார், ஓரே நாளில் வியாபாரம் பேசி முடித்து அடுத்த நாள் மாலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் சவுதி எண்ணெய் உற்பத்திக்காகச் சுமார் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறது. Aramco-வின் இந்த ஒப்பந்தம் மூலம் ஆசியாவில் தனது வர்த்தகம் கூடுதல் வலிமை அடையும்.
இது மட்டுமா..?
கடந்த மார்ச் மாதத்தில் மலேசியா பெட்ரோனாஸ் உடன் 7 பில்லியன் டாலர் ஒப்பந்தம், பிப்ரவரியில் சீனா உடன் 10 பில்லியன் டாலர் ஒப்பந்தம், தென் கொரியா உடன் மட்டும் பல பில்லியன் மதிப்பில் சுமார் 12 ஒப்பந்தங்கள் செய்துள்ளது சவுதி.
உலகம்
ஆனால் உலக நாடுகள் என்னவோ பெட்ரோல், டீசல் விடுத்து மாற்று விழிகளை நோக்கிப் பயணித்து வருகின்றனர். இதற்கு உதாரணம் இந்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ள எலக்ட்ரிக் கார் திட்டம்.
இந்தியாவைப் போல் பிற நாடுகளும் மாற்று சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் சவுதியின் எதிர்காலம் என்ன..?