சவுதி அரேபியா அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோக நிறுவனமான சவுதி ஆராம்கோ சில வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தையில் இறங்கியது எல்லோருக்கும் தெரியும் சுமார் 25.6 பில்லியன் டாலர் தொகையை இதன் மூலம் ஈட்டியது.
ஐபிஓவின் போது 1.7 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட சவுதி ஆராம்கோ முதல் நாள் வர்த்தகத்தில் 10 சதவீதம் வரையில் உயர்ந்து 1.9 டிரில்லியன் டாலர் என் மதிப்பை அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஐபிஓ
உலகிலேயே அதிக லாபம் பெறும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் சவுதி ஆராம்கோ பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்ட நாள் முதல் உலகளவில் மிகப்பெரிய விவாத பொருளாகவே இருந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சவுதி ஆராம்கோ பங்குச்சந்தையில் இறங்க ஐபிஓ வெளியிட்டது. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டி குவித்தனர்.
பங்கு விலை
ஒரு பங்கு விலை 8.53 அமெரிக்க டாலர் என்ற அடிப்படையில் பங்குகளை வெளியிட்ட சவுதி ஆராம்கோ கிட்டத்தட்ட 25.6 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஈர்த்தது. 2014இல் சீனாவின் அலிபாபா நிறுவனம் தான் இதுவரையில் அதிகத் தொகையை ஐபிஓவில் ஈர்த்த நிறுவனமாக இருந்த நிலையில் சவுதி ஆராம்கோ அதையும் மாற்றிச் சாதனை படைத்தது.
அதிக மதிப்புடைய நிறுவனம்
சவுதி ஆராம்கோ தற்போது 1.7 டிரில்லியன் டாலர் என்ற அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளதால் உலகளவில் அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் நாள் வர்த்தகம்
ஐபிஓ வெளியிட்ட பின்பு சவுதி ஆரம்கோ நிறுவனம் ரியாத் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனம் முதல் நாள் வர்த்தகத்திலேயே கிட்டதட்ட 10 சதவீத வளர்ச்சியை அடைந்து இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ஓரே நாளில் 200 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்து 1.9 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நிச்சயம் 2 டிரில்லியன் மதிப்பீட்டை அடைந்து புதிய சாதனை படைக்க உள்ளது சவுதி ஆராம்கோ.
சர்வதேச பங்குச்சந்தை
ஆராம்கோ 4 வருடங்களாகத் திட்டமிட்டுப் பங்குச்சந்தையில் இறங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஆராம்கோ நிறுவனத்தை வெளிநாட்டுப் பங்குச்சந்தையிலும் பட்டியலிடலாம் எனச் சவுதி இளவரசர் திட்டமிட்ட நிலையில் 2 டிரில்லியன் டாலர் மதிப்பு என்பது ஏற்புடையதாக இல்லை எனப் பல அமைப்புகள் கருத்து வெளியிட்ட நிலையில் வெளிநாட்டுச் சந்தையில் பட்டியலிடும் திட்டத்தை இளவரசர் கைவிட்டார்.
ஆனால் தற்போது இருக்கும் நிலவரத்தைப் பார்த்தால் அமெரிக்க, ஐரோப்பியப் பங்குச்சந்தையில் ஆராம்கோ பட்டியலிட்டாலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று தான் தோன்றுகிறது.