அமெரிக்காவின் உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களோடு சுற்றிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு சிறிது நேரம் லாக்டவுன் போடப்பட்டது.
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார் அமெரிக்க அதிபர். அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருக்கிறது வெள்ளை மாளிகை. இங்கே 24 மணி நேரமும் உச்சபட்ச பாதுகாப்பு இருக்கும். பாதுகாப்புப் படை, சீக்ரெட் சர்வீஸ், போலீசார் எனப் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அத்தனை எளிதாக இங்கே ஒரு நபர் நுழைய முடியாது.

இந்த சூழலில் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களோடு சுற்றிய நபர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள வெள்ளை மாளிகை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் வாகனங்கள் வெள்ளை மாளிகையை கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இருப்பினும், துணை அதிபரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடக்கவில்லை என்று சீக்ரெட் சர்வீஸ் துணை இயக்குநர் மேத்யூ குவின் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை மாளிகை அருகே ஒரு நபர் நடமாடியுள்ளார். காவல்துறையினர் விசாரிக்க சென்ற போது அந்த நபர் தப்பியோடி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். பதிலுக்கு சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒரு சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் ஹில்டன் ஹோட்டலில் விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட போது அத்துமீற நுழைய முயன்ற கோல் ஆலன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம், இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதிபர் மற்றும் விருந்தினர்கள் இருந்த அறைக்குள் அவர் நுழைய முயன்ற போது இது நிகழ்ந்தது.
கோல் ஆலன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரான் போர் நடப்பது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பது என அமெரிக்க மக்கள் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடக்கிறதா அல்லது பாதுகாப்பு படையினர் முறையாக செயல்படுவதில்லையா என பல கேள்விகளை எழுப்புகிறது.


Click it and Unblock the Notifications

