டெல்லி: பாகிஸ்தானில் அதீத மழைப் பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த கடும் வெள்ளத்தால் 1396 பேர் இறந்துள்ளதாகவும், இதில் குறிப்பாக 499 குழந்தைகளும் அடங்குவர் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தென் மாகாணமான சிந்துவில் சராசரி மழையை விட 466% அதிக மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முமுவதுமே 30 ஆண்டு சராசரி மழையை விட 190% அதிகமாக மழை பெய்துள்ளது.
90% வெள்ளத்தால் பாதிப்பு
பாகிஸ்தானின் தாது மாவட்ட ஆணையர் சையத் முர்தாசா அலி ஷா, இந்த மாவட்டத்தின் 90% வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த நகரம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஐ நா சபையின் தலைவர் அன்டோனியா குட்டொரெஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிப்பு எவ்வளவு?
இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை கண்டறியும் வேலையிலும் ஐ நா களமிறங்கியுள்ளது.
தற்போது பாகிஸ்தானில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஷெஷ்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொற்றால் பாதிப்பு
ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், பெரும் கடன் பிரச்சனையாலும், பணவீக்கத்தாலும் தத்தளித்து வருகின்றது. கூடாக அன்னிய செலவாணியும் குறைந்து வருகின்றது. அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் இருக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வந்தது. இதற்கிடையில் தான் தற்போது பெருவெள்ளமும் வந்துள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தை பெரிதும் சீர்குலைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி சரிவு
இதற்கிடையில் பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 5%ல் இருந்து 3% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் தானிய உற்பத்தியானது பெரும் அளவில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கமாடிட்டி பொருட்களின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இது மேற்கோண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் எனவும், இதனால் பாகிஸ்தான் பொருளாதாரம் மேற்கொண்டு மந்த நிலைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.