சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர் கிராண்டே பெரும் கடன் நெருக்கடிக்கு மத்தியில் இருந்து வருவது உலகறிந்த விஷயம்.
பெருத்த கடன் பிரச்சனைக்கு மத்தியில் சிக்கியுள்ள நிறுவனத்தினை தான் தற்போது, சீனாவின் ஹாங்காங் எக்ஸ்சேஞ்சில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலகட்டத்தில் சீனாவினை ஆட்டிப்படைத்த ஒரு நிறுவனமாக இருந்து வந்த நிலையில், தற்போது வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளித்து வருகின்றது.
எவர்கிராண்டே
சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஹூ கா யான், சீனாவின் ஹெங்க்டா குழுமத்தினை தொடங்கினார். அது பின்னர் எவர்கிராண்டேவாக பிரம்மாண்ட வளர்ச்சியினை கண்டது. சொல்லப்போனால் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சீனாவில் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றது. இது ரியல் எஸ்டேட் மட்டும் அல்ல, பற்பல துறைகளிலும் வணிகத்தினை செய்து வரும் ஒரு ஆல் ரவுண்டராகவும் இருந்து வருகின்றது.
பல வணிகம் செய்யும் ஆல் ரவுண்டர்
குறிப்பாக நிதி மேலாண்மை. மின்சார கார் உற்பத்தி, உணவு என பல துறைகளில் கொடி கட்டி பறந்து வந்தது. இப்படி பிரம்மாண்ட வளர்ச்சியினை கண்டு வந்த நிறுவனம், தனது வணிகத்தினை மேம்படுத்த 300 பில்லியன் டாலரினை முதலீடாக செய்தது. இதற்கிடையில் சீன அரசு ஒரு புதிய விதிமுறைகளையும் அந்த சமயத்தில் கொண்டு வந்தது. இதன் காரணமாக எவர்கிராண்டே பெரும் சவால்களையும் எதிர்கொண்டது.
இடை நிறுத்தம்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில், மிகப்பெரிய நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையானது சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டே இப்பங்கின் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பங்கு சந்தையில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நிறுத்தம் ஏன்?
இதில் அதன் ப்ராபர்டி சேவை பிரிவு, மின்சார வாகன பிரிவு, சீனா எவர்கிராண்டே நியூ எனர்ஜி வெஹிக்கிள் குரூப் லிமிடெட் உள்ளிட்டவற்றின் பங்குகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து முழுமையான விவரம் எதுவும் வெளியாகவில்லை.
முதலீடுகள் குறையலாம்
பலத்த கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் எவர்கிராண்டே, அதன் சப்ளையர்கள், வங்கிகள் உள்ளிட்டோருக்கு கடனை திரும்ப செலுத்த போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. உலகின் முன்னணி பொருளாதார நாட்டிலேயே இந்த நிலை எனில், மற்ற நாடுகளில் என்ன நிலை? இதனால் முதலீடுகள் சீன பங்கு சந்தைகளில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.