சர்வதேச வர்த்தக சந்தை பெரிய அளவில் மாறி வருகிறது, ஒரு பக்கம் பொருளாதாரம் மந்த நிலையில், மறுப்புறம் வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் இவ்விரண்டுக்கும் மத்தியில் முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சியையும் லாபத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது உலகின் முன்னணி நிறுவனங்கள்.
இந்த நெருக்கடி காரணமாக தான் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அதிகப்படியான நிதி ஆதாரங்களை வைத்திருந்தாலும் தனது முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை அளித்து, தொடர்ந்து பங்கு மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ரிப்போர்ட் சற்று மாறுபட்டது மட்டும் அல்லாமல் முக்கியமானதும் கூட.

உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 மில்லியன் அதாவது 1.4 கோடி வேலைவாய்ப்புகள் மறைந்துவிடும் என்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வை WEF அமைப்பு சுமார் 800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இருக்கும் பல நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற இயந்திரங்களை கொண்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதால் உலகளாவிய வேலை சந்தையே பெரும் பாதிப்பை சந்திக்கும் என WEF தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2027 ஆம் ஆண்டிற்குள் அதாவது அடுத்த 5 வருடத்திற்குள் 69 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என இந்த 800 நிறுவனங்களின் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் 83 மில்லியன் வேலைவாய்ப்புகள் அகற்றப்படும் என்று WEF கண்டறிந்துள்ளது.
இது தற்போதைய மொத்த உலகளாவிய வேலைவாய்ப்பில் 2 சதவீதத்திற்கு இணையாக சுமார் 14 மில்லியன் வேலைவாய்ப்புகள் சந்தையில் இருந்து அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வேலைவாய்ப்பு சந்தையை தாண்டி ஒவ்வொரு நிறுவனத்திலும் பல மாற்றங்களை கொண்டு வரும்.
உலகம் முழுவதும் RENEWABLE ENERGY பிரிவுக்கு அதிகம் கவனம் செலுத்தும் வேளையில், இப்பிரிவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்க கூடும். இதேபோல் செயற்கை நுண்ணறிவு பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதனால் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், பல வேலைவாய்ப்புகளை இழக்க கூடும்.


Click it and Unblock the Notifications