பொதுவாக அரசு ஊழியர்கள் சரியான பணியாற்றுவதில்லை என்ற புகார் பொதுவாக வைக்கப்பட்டாலும், சில உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதே எல்லோருக்கும் பிரச்சனை.
இது இந்தியாவில் மட்டும் தான் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. வளைகுடா நாடுகளிலும் அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
குவைத்
குவைத் நாட்டின் வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் பாதி நிதித்தொகை அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளமாக உள்ளது. இந்நிலையில் குவைத் அரசு இந்தச் சம்பள செலவுகளைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு நடைமுறையை அமலாக்கம் செய்து வருகிறது.
பயோமெட்ரிக்
இதன் ஒருபகுதியாகக் குவைத் அரசு அனைத்து அரசு பணியிடங்களிலும் பயோமெட்ரிக் ரீடர் வைத்துக் காலையில் அரசு ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்து பணி நேரத்தைக் கணக்கிட துவங்கியது.
இப்புதிய மாற்றம் ஓப்பியடிக்கும் ஊழியர்களுக்குப் பெரிய சிக்கலாக வெடித்துள்ளது.
ராஜினாமா
பயோமெட்ரிக் ரீடர் அமலாக்கம் செய்த 3 மாத காலத்தில் மட்டும் மிகவும் குறைவான நேரத்திற்குப் பணியாற்றிய சுமார் 5000 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் பல அரசு ஊழியர்கள் மத்தியில் இப்புதிய உத்தரவில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
இதில் பலர் அலுவலகத்திற்கே வருவதில்லை எனக் குவைத் நாட்டின் நிதித் துறை செயலாளர் கலீபா ஹாமாடா தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சனை
அதேபோன்ற பிரச்சனை தான் வளைகுடா பகுதியில் இருக்கும் பிற நாடுகளிலும் நிலவுகிறது. மேலும் இங்கு அரசு ராஜ குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், முக்கியமான அனைத்து அரசுப் பணிகளிலும் அரசு குடும்பத்தைத் தேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர்.
அதிகச் சம்பளம்
இதனால் அரசும் அரசு ஊழியர்களுக்கும் அதிகப்படியான சலுகையும், சம்பளமும் அளிக்கிறது. இதனால் தான் பட்ஜெட் தொகையில் பாதி அரசு ஊழியர்களுக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.
பொதுமக்கள்
தற்போது குவைத் கொண்டு வரப்பட்டுள்ள முடிவின் மூலம் பல வழிகளில் அரசின் நிதி சேமிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அரசு வேலைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்படும் எனவும் தெரிகிறது.
ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின் அரசு வேலைகள் மேம்பாடுமா அல்லது தொய்வடையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்த நிலையில் வளைகுடா நாடுகள் இதன் நிலையை முழுமையாக உணர்ந்தது.
ஒரு நாள் கண்டிப்பாகக் கச்சா எண்ணெய் வளம் தீர்ந்து விடும், இதனால் அரசு நிதியை முறையாகப் பயன்படுத்திக் கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பியிருக்காமல் மாற்று வர்த்தக முறையை உருவாக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக அரசு ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது.