ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. பல நாடுகளும் பொருளாதார நடவடிக்கை, எண்ணெய் வணிகத்திற்கு தடை, ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவு தடை என தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனால் ரஷ்யாவுக்கும் பெரும் இழப்பு ஏற்படலாம் என்றாலும், இதுவரையில் இது குறித்து பெரியளவில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக ரஷ்யாவே அண்டை நாடுகளுக்கு எதிராக சில தடைகளை விதிக்க தொடங்கியுள்ளது.
இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. எனினும் இவ்வளவு தடைகளுக்கு மத்தியில் ரஷ்யா மெளனமாகவே இருந்து வருவது ஏன்? என்ற கேள்வியும் எழுகின்றது. நிச்சயம் இதற்கும் ரஷ்யா ஏதாவது மாஸ்டர் பிளான் வைத்திருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.
டிஜிட்டல் கரன்சி பயன்பாடு
ரஷ்யாவுக்கு இதுபோன்ற முன் அனுபவம் ஏற்கனவே உண்டு எனலாம். ஏனெனில் கடந்த 2014ம் ஆண்டிலேயே உக்ரைனின் கிரிமீய தீபகற்பத்தை கைப்பற்றியது ரஷ்யா. அப்போதும் அமெரிக்கா இது போன்ற தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யா அப்போதும் பெரும் இழப்புகளை சந்தித்தது. இதுபோன்ற நெருக்கடியான நிலை தான் இப்போதும் வந்துள்ளது. எனினும் இது போன்ற மோசமான நிலையை கையாளும் வகையில், ரஷ்யா டிஜிட்டல் கரன்சியினை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் பலே திட்டம்
தற்போது வெளி நாட்டு நிதிகளை டிஜிட்டல் கரன்சி மூலமாக ரஷ்யா எளிதில் கையாள முடியும். வங்கிகளை போல கிரிப்டோ கரன்சி தளங்களை போல கட்டுபடுத்த முடியாது. மேலும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் தனி நபர்களிடம் எளிதில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். செய்த பரிமாற்றத்தினை அழிக்கும் தொழில் நுட்பத்தினையும் ரஷ்யா வைத்துள்ளது. இதற்கிடையில் தான் சொந்த டிஜிட்டல் கரன்சியையும் திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம்
ஆக இதன் மூலம் ரஷ்யாவின் பரிவர்த்தனை எப்போதும் போல இருக்கலாம். இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உடன் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய விரும்பும் எந்தவொரு நாட்டுடனும், சர்வதேச வங்கி முறைக்கு வெளியே பரிவர்த்தனைகளை நடத்த ரஷ்ய நிறுவனங்களை இது அனுமதி அளிக்கப்படும் எனவும் ரஷ்யாவின் மத்திய வங்கி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவின் இந்த மாஸ்டர் பிளானுக்கு மத்தியில், சிங்கப்பூர் ரஷ்யா மீது அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளையும், சில வங்கிகள் மீதும் தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் சிங்கப்பூர் வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ தடை உள்ளிட்ட அனைத்து பரிமாற்ற வழிகளையும் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் பரிமாற்றம் செய்வதையும், வர்த்தகம் செய்வதையும் தடை செய்யும். குறிப்பாக சிங்கப்பூரின் மத்திய வங்கியானது (MAS), கிரிப்டோகரன்சிகள் மற்றும் NFT போன்ற டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகளையும் கட்டுப்படுத்தியுள்ளது.
சொத்துகள் முடக்கமா?
அது மட்டும் அல்ல, சிங்கப்பூரின் மத்திய வங்கியானது பல ரஷ்ய வங்கிகளின் சொத்துகளை முடக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இதில் விடிபி பைனான்ஷியல் இன்ஸ்டிடியூசன் (VTB Financial institution), Promsvyazbank, பேங்க் ரோஷியா (Bank Rossiya), and Vnesheconombank உள்ளிட்ட வங்கிகள் அடங்கும்.
சிங்கப்பூரின் இந்த நடவடிக்கையால் ரஷ்யா டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்ய முடியாது என்ற நிலையில், இது ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியாக அமையலாம்.