இலங்கையின் பொருளாதார நெருக்கடி பிரச்சனையால் அங்கு பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆட்சி மாற்றமே வந்துள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அங்கு பற்பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், நிதியமைச்சர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இடைக்கால பட்ஜெட்
புதிய இலங்கை அரசுக்கு பற்பல சவால்கள் காத்திருக்கும் நிலையில், முதல் பிரச்சனையே நிதி பிரச்சனையாகத் தான் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிதியுதவி வழங்கப்படும்
முன்னதாக பிரதமராக பதவியேற்ற ரணில், நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் இறங்கும்போது பணவீக்கம் அதிகரிக்கும். இதனால் போராட்டம் வெடிக்கலாம். அரசு எந்தவொரு சூழ்நிலையும் தளராது. மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்கப்படும். எதிர்வரும் கடினமான நாட்களை பார்க்கும்போதும் எதிர்ப்புகள் இருக்கலாம்.
பிரச்சனைகள் வரலாம்
மக்கள் பாதிக்கப்படும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பானது. எனினும் அது அரசியல் அமைப்பை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இதற்கிடையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் செலவினங்களை குறைத்து, முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக உதவும் வகையில் இருக்கும்.
எரிபொருள் விலையேற்றம்
இலங்கை எரிபொருள் விலையை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்தது. இதனால் இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலையானது 420 ரூபாய்க்கும், டீசல் விலை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இது மேற்கோண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது அரசுக்கு வருவாயினை அதிகரிக்கலாம்.
மோசமான நிலை
1948ல் சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இது அன்னிய செலாவணி சரிவு, எரிபொருள் விலை, உணவு பொருட்கள் பற்றாக்குறை, மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் என பலவற்றின் இறக்குமதியும் குறைந்துள்ளது. இதற்கிடையில் தான் பல மாதங்களாக இலங்கையில் பல போராட்டங்கள் வெடித்தன.
சுற்றுலா முடக்கம்
கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் மிக முக்கிய வருவாய் ஆதரமாக இருந்த சுற்றுலா துறை, முற்றிலும் முடங்கியது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பண வரத்தும் குறைந்தது. இதற்கிடையில் பணத்தினை அச்சடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஏற்கனவே பதவியேற்ற பிறகு ரணில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. இதற்கிடையில் பணவீக்கம் வரவிருக்கும் மாதங்களிக்ல் 40% தாண்டலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பணவீக்கம்
மார்ச் மாதத்தில் 21.5% ஆக இருந்த பணவீக்க விகிதம், ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்ந்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் எரிபொருள் விலையானது மீண்டும் தாறுமாறான ஏற்றத்தினை கண்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் இது அவசியமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும், பணம் அச்சிடுவது மேலும் சரிவுக்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.
செலவு குறைப்பு நடவடிக்கை
அரசு சாதகமான செலவினங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. சுகாதாரத்துறையில் செலவினங்களை குறைக்க முடியாது. ஆனால் கல்வித் துரையில் செலவினை குறைக்க பல அம்சங்கள் உள்ளன. இதற்கிடையில் அரசாங்கம் நிதி திரட்டும் வகையில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இது குறித்து ஐ எம் எஃப்பிடம் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றது.
நிதி கிடைக்குமா?
இதற்கிடையில் முறையான பொருளாதார கொள்கை வரைவை கொண்டுவராதவரை இலங்கைக்கு நிதி வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தற்போதிருக்கும் நிலையில் போதிய நிதி உதவிகள் கிடைக்காவிட்டால் நிச்சயம் இன்னும் பல சவால்களை எதிர்கொள்ளலாம்.
இந்தியா போல ?
இலங்கையில் புதிய அரசு வந்துள்ள நிலையில் சமீபத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் விமான நிறுவனத்தினை தனியார்மயமாக்க திட்டமிட்டு வருகின்றது. இந்தியாவிலும் கடுமையான நஷ்டத்திலும் நிதி நெருக்கடியினை சிக்கித் தவித்து வந்த அரசு, சமீபத்தில் தான் அதனை தனியார்மயமாக்கியது. அதோடு அரசின் வருவாயினை அதிகரிக்கும் விதமாக பெட் ரோல் டீசல் மீதான வரியினை அதிகரித்திருந்தது. ஆனால் தற்போது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வரியினை சில தினங்களுக்கு முன்பு குறைத்தது. இதேபோல நெருக்கடியான இந்த சூழலில் இலங்கை மீண்டும் பெட்ரோல், டீசல் விலையினை அதிகரித்துள்ளது.