கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில், அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில், இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.
நாட்டில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீட்க முடியாத அளவுக்கு வீழ்ச்சி காணலாம்
இலங்கையில் நிலவி வரும் அசாதாரணமான அரசியல் பதற்றத்தின் மத்தியில், 2 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் நியமிக்கப்படாவிட்டால், இலங்கையின் பொருளாதாரம் மீட்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாரும் மீட்க முடியாது?
அடுத்த இரண்டு நாட்களில் அரசாங்கம் அமையவில்லை என்றால் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும். அதனை யாராலும் காப்பாற்ற முடியாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இனியும் மோசமடையலாம்
இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இரண்டு வாரங்களுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன், ஏப்ரல் மாதம் பணியை ஏற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். கடந்த மாதத்தில் சிறிய அளவிலேயே பணியை செய்ய முடிந்தது. தற்போதைய அரசியல் நெருக்கடியை விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையக் கூடும். இனியும் ஸ்திரத்தன்மை அடையப்படாவிட்டால் தொடர விரும்பவில்லை என்று முன்னதாக எச்சரித்திருந்தார்.
பங்கு சந்தைகள் முடிவு
வங்கிகள் இரண்டாவது நாளாக மூடப்படிருக்கும் என்பதால், கொழும்பு பங்கு சந்தை இரண்டாவது நாளாக மூட இன்று முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கு இடையே பரிவர்த்தனை நடைபெறும் என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்ல இன்னும் பல அசாதாரண நிகழ்வுகள் இலங்கையில் அரங்கேறி வரும் சூழலில், இலங்கை அடுத்து என்ன செய்யப்போகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்போது நிலைமை சீரடையும்?
இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கே சென்றுள்ளது. இதனால் நாட்டிலுள்ள அடிதட்டு மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலைவாசி உயர்வு மக்கள் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளதுடன், அரசியல் நெருக்கடியையும் உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் எப்படி இந்த நிலைமை சீரடையும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகின்றது.