இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது. இதற்கிடையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதற்கிடையில் அங்கு கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்க விகிதமானது 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் இலங்கைக்கு, இது மேற்கொண்டு சவாலான விஷயமாக வந்துள்ளது.
உணவு பணவீக்கம்
இலங்கையில் நாடு தழுவிய பணவீக்க விகிதமானது கடந்த பிப்ரவரி மாதத்தில் 17.5 சதவீதமாக இருந்தது. இதே மார்ச் மாதத்தில் NPCIன் இந்த பணவீக்க விகிதம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கமானது 24.7 சதவீதத்தில் இருந்து, 29.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு
இதே மார்ச் மாதத்திற்கான நகரும் பணவீக்கம் (moving average inflation) 10.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 9.3 சதவீதமாகவும் இருந்தது.
அரிசி, சர்க்கரை, பால், ரொட்டி, போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, உணவு பணவீக்கத்தினை தூண்டியுள்ளது.
அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு
மேலும் இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் , இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இது கடந்த 2019ல் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்தது, இந்த நிலையில் நவம்பர் 2021ல் 11,850 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.
வருவாய் சரிவு
இலங்கைக்கு, சுற்றுலா வாயிலாக பெருமளவு அன்னிய செலாவணி கிடைத்து வந்தது. நாட்டின் ஜிடிபியில், சுமார் 10 சதவீதம் பங்களிப்பை சுற்றுலா துறை வழங்கி வந்தது. ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு கடும் வீழ்ச்சி கண்டது. அத்துடன் இலங்கை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் கொரோனா காரணமாக இறக்குமதியை குறைத்துக் கொண்டன. இதனால் ஏற்றுமதி வாயிலான அன்னிய செலாவணி வருவாயும் சரிந்துள்ளது.
இறக்குமதி செய்ய முடியவில்லை
கச்சா எண்ணெய், சர்க்கரை, பருப்பு, தானியங்கள், விவசாய பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு இலங்கை அதிகளவில் இறக்குமதியையே சார்ந்துள்ளது. ஆக அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தொகையை இலங்கையால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்ய முடியாத நிலை இருந்து வருகின்றது. இது இன்னும் கடுமையாக விலையேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.
கடன் பிரச்சனை
இது ஏற்கனவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த இலங்கையில், கொரோனா இன்னும் மோசமாக்கியது. அது உக்ரைன் - ரஷ்யா போரினால் பணவீக்கம் தலைவிரித்தாடி வரும் நிலையில், அங்கு எரிபொருள் விலை, உணவு பொருட்கள் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இது இன்னும் கடுமையாக பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடனுதவி எதிர்பார்ப்பு
தற்போது எரிபொருளுக்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இது மேற்கோண்டு இலங்கையினை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் 4 பில்லியன் டாலர் கடனுதவிக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.