ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகின்றது. உக்ரைனில் ராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், தொழிற்சாலைகள் என குறி வைத்து தாக்கி வந்த ரஷ்ய படைகள், தற்போது அப்பாவி மக்கள் இருக்கும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இன்று வரையில் இரு நாடுகளும் கொஞ்சமும் தளராமல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் பலரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ரஷ்யாவின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க மக்கள் உக்ரைனில் உள்ள அசோட் என்ற பெயரிலான ரசாயன ஆலையின் கீழ் பகுதியில் சுமார் 800 பேர் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த 2 நாட்களுக்குள் இந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாமோ என்ற யூகங்களும் இருந்து வருகின்றது.
ரஷ்யாவை ஒதுக்க திட்டம்
ஒரு புறம் இப்படி மாறி மாறி தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள நிலையில், மறுபுறம் ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் மாறி மாறி தடை விதித்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் மீது தடை விதித்துள்ளன. ரஷ்யாவின் மிக முக்கிய வணிகமான கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டால், ரஷ்யா பின் வாங்கலாம் என அண்டை நாடுகள் திட்டமிட்டன.
இலங்கை ஆர்வம்
ஆனால் ரஷ்யாவோ இதற்கும் அஞ்சாது தள்ளுபடி விலையில் எண்ணெய் சப்ளை செய்யப்படும் என அறிவித்தது. உலகின் மிகப்பெரிய நுகர்வோரான இந்தியா, சீனா ஏற்கனவே தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது. இந்த நிலையில் தற்போது நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை, ஆட்சி மாற்றம் பல அதிரடி மாற்றங்களை கண்டுள்ள இலங்கையும் இந்த லிஸ்டில் வரலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளன. எனினும் வளைகுடா நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் பின்னடைவு
ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியானது மேலும் மோசமடைந்து வருகின்றது. குறிப்பாக பல்வேறு உணவு பொருட்கள், மூலதன பொருட்கள், எண்ணெய் விலைகள் என பலவும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் பல தசாப்தங்களில் இல்லாதளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
இதற்கிடையில் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கவும், அதன் மூலம் பணவீக்கத்தினையும் கட்டுக்குள் கொண்டு வரவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இது இலங்கை தற்போதுள்ள நிலையில் மிகப்பெரியளவில் கைகொடுக்கும் எனலாம். அதோடு சீன அரசு புதிய கடனுதவி செய்ய முன் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சீனாவினால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றாலும், நிலைமை இன்னும் மோசமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
விலைவாசி உச்சம்
ரஷ்யா உக்ரைன் பிரச்சனை காரணமாக ஏற்கனவே இலங்கையில் உணவு பொருட்கள் விலை, எரிபொருள் விலை என பல அத்தியாவசிய பொருட்கள் விலை மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் இந்த முடிவானது நிச்சயம், தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வர உதவும் எனலாம்.
பிரச்சனை தொடரும்
உக்ரைன் பிரச்சனையானது மிக மோசாமான நிலையில் இருந்து வரும் நிலையில், உணவு பொருட்கள் பற்றாக்குறையானது 2024 வரையில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை 51 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் கடன் அளவைக் கொண்டுள்ளது.போதிய அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமையால் இறக்குமதிகள் குறைந்துவிட்டது. முக்கிய உணவு பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள், தீப்பெட்டிகள், கழிவறை காகிதங்கள் என பலபவும் பெற மிகுந்த சிரமத்தினை எட்டி வருகின்றது. மக்கள் மணி கணக்கில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நின்று வரும் நிலையை பார்க்க முடிகிறது.
இறக்குமதி கட்டாயம்
இலங்கைக்கு தற்போது மிக அவசியமாக இருக்கும் எரிபொருள் இறக்குமதியினை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஏற்கனவே இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களிடம் இருந்து, எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வருவாய் சரிவு - செலவு அதிகரிப்பு
மேலும் சீனாவிடம் கடன்களை மறுசீரமைப்பு செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் ரணில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2019ல் வரி குறைப்பு நடவடிக்கைகள், கொரோனா, சுற்றுலா தடையால் வருகை சரிவும் சப்ளை சங்கிலியில் பாதிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் பெரும் பின்னடை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அதன் வருவாய் பெரும் சரிவினைக் கண்டுள்ளது. அதேசமயம் விலைவாசி விண்ணை எட்டியுள்ளது. இதன் காரணமாக இலங்கை கையிருப்புகளை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உற்பத்தி சரிவு
உக்ரைனால் ஏற்கனவே பொருளாதாரம் சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் மோசமான நிலையை எட்ட கூடும். இந்த ஆண்டின் இறுதிக்குள் மற்ற நாடுகளிலும் தாக்கம் இருக்கலாம். உலகளவில் உணவு பற்றாக்குறை உள்ளது. பல நாடுகள் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. இலங்கையில் ஏற்கனவே விலைவாசி மோசமான உச்சத்தில் காணப்படுகின்றது. இலங்கையில் காய்கறிகளின் விலை உச்சத்தினை எட்டியுள்ளது. நெற்பயிர் மூன்றில் ஒரு பங்காக சரிவினைக் கண்டுள்ளது.
சாமானியர்கள் பாவம்
ஏற்கனவே பற்றாக்குறை என்பது நடுத்தர மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நான் குடிமகனாக மிகவும் மோசமாக உணர்கிறேன். இலங்கையில் இதுபோன்ற தொரு நிலையை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. முன்பும் கடினமான காலங்கள் இருந்தது. ஆனால் இதுபோன்று இல்லை என கூறினார்.