கொரோனா வைரஸ் நம் தெரு முனை டீக்கடை அண்ணாச்சி முதல் அமேசான் ஓனர் வரை ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லை.
அனைவரையும் ஒரு போடு போட்டிருக்கிறது. இதனால் கம்பெனிகளில் லே ஆஃப் தொடங்கி சம்பள குறைப்பு வரை பல நடவடிக்கைகளை எடுத்து பணியாளர்களை கதி கலங்கச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு கொடுமையான விஷயம் என்ன என்றால், அடுத்தடுத்த புதிய திட்டங்களும் கொரோனா பாதிப்பால் அடி வாங்கும். அப்படித் தான் கூகுளிலும் நடக்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அல்ஃபபெட் (Alphabet)
உலக புகழ்பெற்ற கூகுள் சர்ச் இன்ஜினின் தாய் நிறுவனம் தான் அல்ஃபபெட் (Alphabet). இந்த கம்பெனியே, இந்த 2020-ம் ஆண்டில் சில முதலீடுகளை பின் வாங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்றால் கொரோனாவின் படு பயங்கரமான பொருளாதார தாக்குதலை புரிந்து கொள்ள முடிகிறது. முதலீடுகள் பின் வாங்குவதை ஆட்களை புதிதாக வேலைக்கு எடுப்பதில் இருந்து தொடங்கி இருக்கிறார்கள்.
சுந்தர் பிச்சை
"கூகுள் நிறுவனத்தில், கணிசமாக புதிய நபர்களை வேலைக்கு எடுப்பதை குறைக்க வேண்டிய நேரம் இது என நம்புகிறோம். இருப்பினும், ஒரு சில முக்கிய துறைகளில் ஆட்களை வேலைக்கு எடுப்போம்" என நம் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையே ஒரு மெமோவில் சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
முதலீடுகள்
புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் விவகாரத்தைத் தாண்டி, முதலீடுகளை செய்வார்களாம். ஆனால் அந்த முதலீடுகளை எதில் செய்ய வேண்டும், எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு செய்ய இருக்கிறார்களாம். ஆக கூகுள் கூட இந்த கொரோனாவால் ஜர்க் அடிக்கத் தொடங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
வேலையில் சேர்தல்
வேலைக்கு புதிதாக ஆட்களை எடுப்பதை குறைப்பதுடன், வேலைக்குத் தேர்வானவர்களையும், கம்பெனியில் வேலைக்குச் சேர்வதை கொஞ்சம் தாமதப்படுத்த இருக்கிறார்களாம். இதை கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் (Spokes person) உறுதி செய்து இருக்கிறார். எத்தனை பேரின் எதிர்காலம், இந்த தாமதப்படுத்தல் நடவடிக்கையால் தள்ளி போகப் போகிறதோ..?
புதிய ஊழியர்கள்
கடந்த 2019-ம் ஆண்டில் சுமார் 20,000 ஊழியர்கள் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறார்களாம். இந்த ஆண்டும் அதே போல 2020-லும் ஆட்களை எடுக்க திட்டமிட்டு இருந்தார்களாம். இதுவரை சுமாராக 4,000 பேர் புதிதாக வேலையில் சேர்ந்து இருக்கிறார்களாம். இன்னும் 1,000 பேர் கூகுள் நிறுவனத்தில் வேலையில் சேர ஷெட்யூல் செய்து இருக்கிறார்களாம்.
2008
கொரோனா வைரஸ் பிரச்சனை, 2008 பொருளாதார நெருக்கடி போல இருக்கிறது. ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே பலமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. கூகுள் மற்றும் அல்ஃபபெட் மட்டும் கொரோனாவின் எதிர்வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது என கூகுளின் முதன்மைச் செயல் அதிகாரி (சி இ ஓ) சுந்தர் பிச்சையே சொல்லி இருக்கிறார்.
வலி
"நாம் இன்று பார்ட்னர்ஷிப் சூழலில் இருக்கிறோம். அதோடு ஒவ்வொரு வியாபாரமும் மற்றொரு வியாபாரத்துடன் தொடர்பு உடையதாக இருக்கும் சூழலில் இருக்கிறோம். நம் பார்ட்னர்களில் பலரும் மிகப் பெரிய வலியில் இருக்கிறார்கள்" என சுந்தர் பிச்சையே சொல்லி நம்மை அலர்ட் செய்து இருக்கிறார். என்று ஒழியும் இந்த கொரொனா?