ஸ்வீடன்: பல்வேறு நிறுவனங்களும் மனிதர்களை பணிநீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பணிக்கு அமர்த்தி வரும் நிலையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஏஐக்கு மாற்றாக மனிதர்களை பணி நியமனம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் தொழில்நுட்பம் பலதுறைகளிலும் கால்பதித்து விட்டது. பெரும்பாலான டெக் நிறுவனங்கள் எல்லாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு மனிதர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
டெக் நிறுவனங்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. ஏஐ சாட் பாட் , ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களுக்கு நிகராகவும் அதிக செயல்திறனுடனும் செயல்படுவதாக நிறுவனங்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.

இதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறி போன வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுப்பதை நாம் காண முடிகிறது.
உலகின் முன்னனி டெக் நிறுவனமான கூகுள், மெடா, மைக்ரோசாப்ட் ஆகியவை எல்லாம் கோடிங் வேலைகளை பெரும்பாலும் ஏஐ தொழில்நுட்பத்திடமே வழங்கிவிட்டன. எனவே சாப்ட்வேர் பிரிவில் வேலை செய்து வந்த பலருக்கும் ஏஐ மூலம் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. அதே போல அண்மையில் தான் ஐபிஎம் நிறுவனம் ஹெச் ஆர் வேலைகளில் மனிதர்களை பணிநீக்கம் செய்துவிட்டு ஏஐ ஏஜெண்டுகளை பணிக்கு அமர்த்துவதாக தெரிவித்தது.
இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது பிபிஓ எனப்படும் Business Process Outsourcing துறை. இந்தியாவின் பிபிஓ துறையின் மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வலுவான வேலை வாய்ப்பு கொண்ட ஒரு துறையாக பிபிஓ துறை செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிபிஓ துறையில் ஏஐ பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வந்து விட்டது . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்படும் ஏஜெண்டுகள் பிபிஓ வேலைகளை செய்ய தொடங்கிவிட்டன.
இப்படி அனைத்து துறைகளிலும் ஜெனரேட்டிவ் ஏஐ-இன் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இப்படி தான் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிளார்னா என்ற ஃபின்டெக் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தது. 2022 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் சுமார் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
சாட் ஜிபிடியின் உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து தங்கள் நிறுவன பணிகளை ஏஐ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்தது. ஆனால் கிளார்னா நிறுவனம் அது தவறு என்பதை தற்போது உணர்ந்துள்ளது. முன்னதாக ஏஐ தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மனிதர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் தங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினங்கள் குறையும் என்றும் செயல்திறன் அதிகரிக்கும் என்றும் கிளார்னா நிறுவனம் அறிவித்தது.
2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் மனிதர்களை பணிக்கு அமர்த்துவதையே முழுமையாக நிறுத்திக் கொண்டது. முழுக்க முழுக்க ஜெனரேட்டிவ் ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மூலம் மொழிமாற்றம் செய்வது, தரவுகளை பகுப்பாய்வு செய்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வந்தது . இந்த சமயத்தில் தான் கிளார்னா நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் 700 மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களே மேற்கொள்கின்றன என பெருமையாக தெரிவித்தது .

இந்த சூழலில் கிளார்னா நிறுவனம் திடீரென தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது. அதாவது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பங்களை சார்ந்து தங்களுடைய பணிகளை மாற்றி அமைத்தது, தங்கள் நிறுவனத்தின் சேவை தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறது. ஒரு தளத்திற்கு பேட்டி அளித்திற்கும் கிளார்னா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான செபாஸ்டியன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் செலவுகள் குறைகிறது என்பதுதான் ஆனால் ஏஐ தொழில்நுட்பங்களின் சேவை தரம் மனிதர்களுக்கு நிகரானதாக இல்லை என்பதை நாங்கள் இப்போது உணர்ந்து விட்டோம் எனக் கூறியிருக்கிறார்.
குறிப்பாக வாடிக்கையாளர் சேவை பணிகளில் மனிதர்களை மனிதர்களை நியமிப்பது தான் நிறுவனத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது என குறிப்பிடும் அவர் ஒரு பிராண்டாகவும் அல்லது ஒரு நிறுவனமாகவும் எங்களுடைய பார்வையில் பார்க்கும்போது மனிதர்களுடன் கலந்துரையாட கண்டிப்பாக மனிதர்கள் தான் தேவை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது தங்கள் நிறுவனம் மீண்டும் பழையபடி மனிதர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக வாடிக்கையாளர் சேவை பிரிவுகளில் ஏஐ தொழில்நுட்பங்களுக்கு மாற்றாக மீண்டும் மனிதர்களையே கொண்டு வரப் போகிறோம் என்றும் கூறியிருக்கிறார். முன்னதாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் 55 சதவீத தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த வேலையில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்தது தவறு என தற்போது வருந்துவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
ஏஐ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. நிதி, சேவை, ஐடி என துறை சார்ந்து ஏஐ தொழில்நுட்பங்கள் செயல்பட தொடங்கிவிட்டன. இதனால் மனிதர்கள் வேலையை விட்டு நீக்கப்படுகின்றனர். ஆனால் மனிதர்களின் வேலையை ஏஐ தொழில்நுட்பம் முழுவதுமாக பறித்துவிடும் என கருத முடியாது என்ற கருத்தும் பரவலாக முன் வைக்கப்படுகிறது. அதற்கு உதாரணம் தான் இந்த ஸ்வீடன் நிறுவனத்தின் யூ டர்ன். ஏனெனில் மனிதர்களுடன் உணர்வுகளோடு கலந்துரையாட மனிதர்களே தேவை என்பதையே இந்த நிறுவனத்தின் அனுபவம் காட்டி கொடுக்கிறது.
இருந்தாலும் வேலையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை இத்துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து முன் வைக்கின்றனர். வேலைவாய்ப்பு சந்தை பெரிய மாற்றம் கண்டு வரும் நிலையில் மனிதர்கள் அதற்கு ஏற்றபடி தங்களை தகவமைத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications