லண்டன்: சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலையால் பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. அதில் முதலிடம் ஆட்டோமொபைல் துறைக்கே. இதில் ஆட்டோமொபைல் துறைக்கு மூலதனமாக இருக்கக் கூடிய ஸ்டீல் துறையும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
இதன் விளைவாக சங்கிலி தொடர்போல ஆட்டோமொபைல் துறையை போல, தற்போது ஸ்டீல் துறையிலும் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டீல் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆன டாடா ஸ்டீல் சர்வதேச அளவில் இருக்கும் தனது கிளைகளில், பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது குறித்தான அறிக்கையை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் தனது உற்பத்தியை நிறுத்தியதோடு, ஆலைகளையும் மூடப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டாடா ஸ்டீல் ஐரோப்பாவில் தனது வணிகத்திற்காக மறுசீரமைப்பு பற்றி ஐரோப்பிய பணிகள் கவுன்சில் உடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இதில் 3000 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கருதப்படுகிறது. அதிலும் இதில் லண்டனை சேர்ந்த 1000 ஊழியர்கள் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளது.
விரிவாக நஷ்டத்தினை எதிர்கொண்டுள்ள இந்த ஸ்டீல் துறையில், பெரிய நஷ்டத்தினை கண்ட இந்த நிறுவனம் தொடர்ந்து பணி நீக்கம் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தாங்கள் உலக அளவில் எதிர்கொண்டு வரும் தலைவலிகளையும் குற்றம் சாட்டியுள்ளது இந்த நிறுவனம்.
இது தவிர நெதர்லாந்தில் 1,600 பேர், மற்ற இடங்களில் 350 பேர் என பலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா ஸ்டீல் நிதி ரீதியாக வலுவான மற்றும் நிலையான ஐரோப்பிய வணிகத்தை உருவாக்குவதைக் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் புதுமைகளை விரைவுபடுத்துதற்கு தேவையான முதலீடுகளையும் செய்ய வேண்டும்.
மேலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை மேம்படுத்துவதற்காக, அதிக மதிப்புள்ள இரும்புக் கம்பிகளின் விற்பனையை அதிகரித்தல், உற்பத்தி செயல்பாட்டு முறைகளை மேம்படுத்துதல், செயல்திறன் மூலம் ஆதாயம், பெரிய அளவிலான தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வின் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. மேலும் செலவினை குறைத்தல், விற்பனையை வலுப்படுத்தல் ஆகியவை முக்கிய திட்டங்களாகும். இதன் ஒரு பகுதியாகவே தற்போது பணி நீக்கம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.