எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மாஸ்க் லாபத்தினை அதிகரிக்க 9 சதவீத ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் 3,500 ஊழியர்கள் வரை பாதிக்கப்படுவார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.
மேலும் எலன் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அலுவலக ஊழியர்கள் தான் இதில் பாதிக்கப்படுவார்கள் என்றும் உற்பத்தி தொழிலாளர்களுக்குப் பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லாபம்
டெஸ்லா நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் 5.4 பில்லியன் டாலர் நட்டம் அடைந்துள்ளதாகவும் நடப்பு நிதி ஆண்டில் மேலும் 1.3 பில்லியன் டாலர் இழப்பு ஏபட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுவதால் முதன் முறையாக லாபத்தினைக் கருதி ஊழியர்களை வெளியேற்ற இருக்கிறது.
ஊழியர்கள் வெளியேற்றத்தால் என்ன பயன்?
ஊழியர்களை வெளியேற்றுவதன் மூலம் டெஸ்லா நிறுவனத்திற்கு இந்த ஒரு காலாண்டில் மட்டும் 80 மில்லியன் டாலர் வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் எண்ணிக்கை
டெஸ்லா நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 5 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 12 மடங்கு உயர்ந்து சென்ற ஆண்டு 37,500 -ஐ விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா ஏன் செலவுகளைக் குறைக்க வேண்டும்?
டெஸ்லா நிறுவனம் மாடல் 3 கார் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் கார் நிறுவனத்தினைத் துவங்குவது, பேட்டரி தொழிற்சாலைகள் துவங்குவது, ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் டிரக் உற்பத்தி போன்ற வணிகங்களில் கவனம் செலுத்துவதால் 2020-ம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது. இதற்காகவே இந்த ஊழியர்கள் பணி நீக்கத்தால் செய்ய இருக்கும் செலவு குறைப்பு நடவடிக்கை ஆகும்.
முதல் முறை
டெஸ்லா நிறுவனத்தின் 15 வருட வரலாற்றில் இதுவே மிகப் பெரிய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை ஆகும். ஆனால் இதனைச் செய்யவில்லை என்றால் நமது இலக்கினை அடைய முடியாது என்றும் எலன் மாஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.