டோக்கியோ: உலகின் முன்னணி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு நிறுவனமான தோஷிபா, தனது கணக்கு வழக்குகளில் செய்யப்பட்ட 1.3 பில்லியன் டாலர் ஊழல் செய்தியை தொடர்ந்து நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதி நிலையைச் சீர்ப்படுத்த சுமார் 7,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
தோஷிபா நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு மட்டும் அல்லாமல் அணு சக்தி துறையிலும் செயல்பட்டு வருகிறது.
டிவி தொழிற்சாலை விற்பனை
இந்நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த இந்தோனேஷியாவில் உள்ள டிவி தொழிற்சாலையை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் தோஷிபா நிறுவனத்தில் 10,000 க்கும் அதிகமான ஊழியர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும்.
இந்நிலையில் ஊழியர்கள் விரைவில் ஓய்வு பெறுவதை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நஷ்டம்
அதுமட்டும் அல்லாமல் இந்தோனேஷியா தொழிற்சாலை விற்பனை பிறகும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் 2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 4.53 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்திக்க உள்ளதாகத் தோஷிபா கணித்துள்ளது.
திட்டம்
பணிநீக்கம், தொழிற்சாலை மற்றும் பல மறுசீரமைப்பு திட்டங்களின் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை அதிகரிக்க முடியும் எனத் தோஷிபா தெரிவித்துள்ளது.
140 ஆண்டுகள்
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தோஷிபா ஜப்பான் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் 140 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.