சமீபத்தில் "அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்" என்கிற தலைப்பில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பிரச்சனைகளை சர்வதேச அரசியல் விவகார நிபுணர்கள் எப்படி பார்க்கிறார்கள் என எழுதி இருந்தோம்.
அதில் சீனாவும் அமெரிக்காவும் ஒரு பனிப் போரில் இருக்கிறார்கள் அல்லது ஒரு பனிப் போருக்குள் நுழைகிறார்கள் என பல நிபுணர்களும் தங்கள் கருத்தை முன் வைத்து இருந்தார்கள்.
இப்போது மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவை ஒரண்டைக்கு இழுக்கும் விதத்தில் பேசி இருக்கிறார்.
ட்ரம்ப் Vs ஜி ஜின்பிங்
கடந்த நவம்பர் 2016-ல் அமெரிக்காவின் அதிபராக பதவிக்கு வந்தார் டொனால்ட் ட்ரம்ப். கடந்த மார்ச் 2013-ல் சீனாவின் அதிபராக பதவிக்கு வந்தார் ஜி ஜின்பிங். 2018-ம் ஆண்டு அமெரிக்கா, சீனாவின் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தது. சீனாவும் பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது.
அதிகரித்த சிக்கல்
அன்றில் இருந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கூடுதல் வரி விதிப்பில் தொடங்கிய பிரச்சனை வர்த்தகப் போராக உருமாறியது. அதை தீர்த்துக் கொள்ள ஜனவரி 2020-ல் தான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதையும் ரத்து செய்துவிடுவேன் என ட்ரம்ப் மிரட்டினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மோதும் நாடுகள்
வர்த்தகப் போர் முடிந்து சுமூகமாக பிரச்சனைகள் தீர்வதற்குள், கொரோனா வைரஸ் வந்துவிட்டது. கொரோனா வைரஸை சீன வைரஸ் என ட்ரம்ப் சர்வதேச அரங்குகளில் சொல்லி சீனாவை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியதும் இங்கு நினைவு கூறத்தக்கது. வெறுமனே கொரோனா வைரஸ் விஷயத்தில் குற்றம் சாட்டிவிட்டு உட்காரவில்லை அமெரிக்கா.
அடுத்தடுத்த பிரச்சனைகள்
சீனாவின் எல்லா விவகாரங்களிலும் தன் கருத்தைச் சொல்லத் தொடங்கியது. சிங் ஜியாங் (Xinjiang) பகுதியில் வாழும் உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரம், ஹாங்காங் சுதந்திர விவகாரம், மிக முக்கியமாக தென் சீனக் கடல்... என எல்லா பிரச்சனைகளிலும், சீனாவுக்கு எதிராகவே அமெரிக்கா நடந்து கொண்டது. நடந்து கொள்கிறது.
சும்மா இருக்குமா சீனா
கொஞ்சம் பொறுமை காத்த சீனா, தற்போது இறங்கி அடிக்கத் தொடங்கி இருக்கிறது. "அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்" "திருப்பி அடிப்போம்" என கடுமையாக பதில் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது சீனா. அமெரிக்கர்களின் விசா விவகாரங்களில் கூட கை வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. சரி சமீபத்தைய பஞ்சாயத்துக்கு வருவோம்.
கொரோனா சீனாவில் இருந்து வந்தது
சமீபத்தில், வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸுக்கான டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரிகளோடு பேசத் தொடங்கும் போதே "கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தது. கொரோனா வைரஸை வெளியே வர விட்டு இருக்கக் கூடாது. சீனாவால் கொரோனா வைரஸை எளிதில் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை" எனப் பேசித் தான் தொடங்கி இருக்கிறார் என Zee நியூஸ் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக சீனாவை மீண்டும் வைத்து செய்யத் தொடங்கி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
வெளிப்படைத் தன்மை இல்லை
"அதே போல கொரோனா வைரஸை கையாண்ட விதத்திலும் சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. சீனா எப்போதுமே வெளிப்படையாக இருந்ததில்லை. அது நல்லதுக்கு அல்ல" என பேசி இருக்கிறார் என்கிறது ஜி வலைதளச் செய்திகள். என்ன செய்ய பல காலமாகவே அதிபர் ட்ரம்ப், சீனாவை கட்டம் கட்டி குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார். "என்னைப் போல எந்த அதிபரும் சீனாவோடு இத்தனை கடுமையாக நடந்து கொண்டதில்லை" எனவும் ஒரு முறை ட்ரம்பே தன் வாயால் சொன்னதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனா
உலகின் வல்லரசு எனச் சொல்லப்படும் அமெரிக்காவிலேயே 39.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1,43,834 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். சுமாராக 18.49 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்கள். இத்தனை பேர் பாதிக்கப்படும் போது அதிபர் ட்ரம்புக்கு கொஞ்சம் கோபம் வரத் தானே செய்யும்! இந்த கோபத்தில் இன்னும் என்ன எல்லா செய்யப் போகிறாரோ அமெரிக்காவுக்குத் தான் வெளிச்சம்.