அமெரிக்க தேர்தல் முறையில் மாற்றம் தேவை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் வாக்காளர் அடையாள அட்டையை முன்மாதிரியாகக் காட்டி வெகுவாக பாராட்டியுள்ளார். இதன் மூலம் தேர்தல்களில் அமெரிக்கா இனி இந்தியாவை பின்பற்ற போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தேர்தல் முறைகளை வலுப்படுத்தவும், அங்கு கடுமையான சட்டங்களை கொண்டு வரவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் தேர்தல் முறையை சுட்டிக்காட்டி அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ட்ருத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாருடன் தான் நடத்திய உரையாடலை நினைவு கூர்ந்துள்ளார்.

அந்த உரையாடலின் போது, கியானேஷ் குமார் அமெரிக்க நிர்வாகத்திடம் அமெரிக்காவில் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமலேயே எப்படி தேர்தல் நடத்த முடியும் என கேள்வி எழுப்பினாராம். இதனை டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அண்மையில் பொதுத் தேர்தலில் சுமார் 64.6 கோடி மக்கள் வாக்களித்ததையும், அதில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் வாக்கு முறையை பயன்படுத்தியதையும் டிரம்ப் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய தேர்தலின் ஒவ்வொரு வாக்காளரும் கட்டாயம் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் பெரிதும் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகளை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், அமெரிக்காவில் 'சேவ் அமெரிக்கா ஆக்ட்' (SAVE America Act) சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக அமெரிக்க தேர்தல்களில் வாக்களிக்க அமெரிக்க குடிமகனாக இருப்பது கட்டாயம். வாக்கு பதிவின் போது செல்லுபடியாகும் அடையாள சான்றிதழ் மற்றும் குடியுரிமைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ சேவை மற்றும் பயணம் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே தபால் வாக்கினை பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது. மாநில அரசுகள் தகுதியற்ற நபர்களை அல்லது குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வது ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் தேர்தல் நடைமுறை போலவே அமெரிக்காவிலும் அடையாள அட்டை கொண்ட தேர்தல் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது டிரம்பின் விருப்பம். இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார். அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில், இந்த சட்டம் குறித்து கூறுகையில், அமெரிக்க தேர்தல்களை அமெரிக்க குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இது ஒரு பொது அறிவு சார்ந்த, இருதரப்பு ஆதரவு கொண்ட சட்டம், என தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தங்களின் வாக்காளர் அடையாளத்தை பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைத்துள்ளன, ஆனால் அமெரிக்கா தனது வாக்காளர்களின் குடியுரிமையை உறுதி செய்ய சுய அறிவிப்பையே நம்பியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த முயற்சி, எதிர்வரும் காலங்களில் அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

