அமெரிக்க மென்பொருள் வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை 2017ஆம் ஆண்டில் அந்நாட்டுக் கல்லூரிகளில் இருந்து அதிகளவிலான பிரஷ்ஷர்களை அதாவது பட்டப்படிப்பை முடித்தவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் (Donald Trump) தலைமையிலான அரசு கொண்டு வரும் புதிய விசா விதிமுறைகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும் என இந்திய ஐடி நிறுவனங்கள் நம்புகிறது.
இந்திய ஐடி சந்தை
150 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் தனது சேவை அளித்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் சேவை அளிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்கவும், திறம்படச் சேவையை அளிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்திய மென்பொருள் பொறியலாளர்களைத் தொடர்ந்து வெளிநாடுகளில் பணியில் அமர்த்தி வந்தது.
வெற்றி
இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் சேவை தரம் பலமடங்கு உயர்ந்ததால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பிராஜெக்ட்கள் இந்திய ஐடி நிறுவனங்கள் கையில் குவிந்தது.
பிரச்சனை வெடித்தது
இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து மென்பொருள் பொறியலாளர்களை இந்தியாவில் இருந்தே அமெரிக்க நிறுவனங்களில் பணியில் அமர்த்தி வந்தது.
இதனால் பல அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கப் பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கிவிட்டு இந்திய பணியாளர்களைக் குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்தினர். இதனால் பல நிறுவனங்களில் இருந்து அமெரிக்க ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மசோதா
இந்நிலையில் செனேட்டார் ஜெப் செஷன்ஸ் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்று புதிய மசோதாவைக் கொண்டு வந்தார். இதில் எச்1-பி மற்றும் எல் 1 விசா பெறுதில் பல முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த மசோதாவைத் துவக்கம் முதல் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் ஆதரித்து வந்தார். அதுமட்டும் அல்லாமல் அவருடை சிந்தனைக்கு இந்த மசோதா அதிகளவில் ஒத்துப்போகிறது. மேலும் இதனை முழுமையாக அமலுக்குக் கொண்டு வரவும் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இந்திய நிறுவனங்கள்
இந்திய மென்பொருள் துறைமட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அவுட்சோர்சிங் துறைக்கு அமெரிக்கா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
இந்நிலையில் புதிய மசோதா அமலுக்கு வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் மாற்று வழியைத் தேடி வருகிறது.
இன்போசிஸ்
இந்நிலையில் புதிய விசா விதிமுறைகளுக்கு ஏற்ப அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்து பட்டம்பெற்ற மாணவர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாகவும், அமெரிக்காவில் வர்த்தகம் பாதிக்காத அளவிற்குப் புதிய ஊழியர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான யுபி பிரிவின் தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான அஜோந்திரா முகர்ஜி கூறுகையில், அமெரிக்க வர்த்தகத்திற்காக அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்து நேரடியாக நிறுவன பணியில் அமர்த்துவது உறுதி என்றாலும் எத்தனை பேர், எத்தனை சதவீதம் என்பதும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
பாதிப்பு
அமெரிக்கச் சந்தையில் அந்நாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்துவதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் லாப அளவுகள் குறையலாம். மேலும் நிறுவனத்தின் செலவினங்கள் அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
கணிப்பு
நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கும் நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் ஐடி ஊழியர்களின் சம்பள உயர்வில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்படுகிறது.