அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதித்தார். இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது.
இறக்குமதி வரியை உயர்த்தினால் பல்வேறு நாடுகளும் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும், அமெரிக்காவில் உற்பத்தி அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார். இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்து இருக்கிறது. ஆனால் சாமானிய மக்களுக்கு பல்வேறு பொருட்களின் விலைகளை உயர்த்திருக்கிறது. குறிப்பாக பல்வேறு உணவுப் பொருட்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்திருக்கிறதாம்.

உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு சாமானிய மக்களுக்கு அமெரிக்க அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி தந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க முடிவு செய்து இருக்கிறதாம். குறிப்பாக மாட்டிறைச்சி மற்றும் சிட்ரஸ் தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரிகளை முழுமையாக நீக்குவது அல்லது குறைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த மேயர் தேர்தல்களில் எல்லாம் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்தது , மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்தது , வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது, டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை காரணம் என சொல்லப்படுகிறது .
இத்தகைய சூழலில் தான் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தங்களுடைய கடுமையான வர்த்தக கொள்கைகளை சற்றே தளர்த்துவதற்கு முன் வந்திருக்கிறது . அமெரிக்கா வர்த்தகத்துறை அமைச்சர் கிட்டதட்ட 1000 பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறாராம். இதுவரை அமெரிக்க உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தாத நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு சார்ந்த பொருட்களுக்கான இறக்குமதி வரிகளில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசண்ட் ஃபாக்ஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் கவலைப்பட வேண்டாம் விரைவில் பல்வேறு உணவு பொருட்களின் விலை குறைய போகிறது என தெரிவித்துள்ளார். எனவே மறைமுகமாக வரி குறைப்பு பணிகளை டிரம்ப் மேற்கொண்டு வருவதையே அவருடைய இந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இருந்து அமெரிக்கா கடல் சார் உணவுகளை இறக்குமதி செய்கிறது. ஏற்கனவே இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையும் நடந்துவருவதால் விரைவில் அந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications