சீனாவின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி நிறுவனத்தைச் சீனா ராணுவத்துடன் தொடர்புடையது என அறிவித்து டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமெரிக்காவில் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவின் எதிரொலியாகச் சியோமி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 11 சதவீதம் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல், இந்தத் தடையின் மூலம் சியோமி நிறுவனத்தில் இனி எந்த அமெரிக்கரும், அமெரிக்க நிறுவனமும் முதலீடு செய்ய முடியாது.
டிரம்ப் அரசு
டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தடை செய்யப்பட்டு உள்ள சியோமி அமெரிக்க முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் முறையற்ற வரையில் பயன்படுத்தி முதலீட்டைச் சீன ராணுவத்தை மேம்படுத்துவதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் பயன்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சியோமி மீது தடை
சியோமி தனது பங்குகளை அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் அதிகளவிலான முதலீட்டைத் திரட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வருகிற நவம்பர் 2021க்குள் சியோமி முதலீடுகளை முழுமையாக விடுத்து வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா சீனா
அமெரிக்கா சீனா இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசு அடுத்தடுத்து சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து வருகிறது.
சமீபத்தில் டிரம்ப் அரசு அமெரிக்காவில் செயல்படும் சீன நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிதியியல் கணக்கை அமெரிக்க அரசு தணிக்கை செய்யப்பட்ட பின்பே முதலீட்டை ஈர்க்க முடியும் எனப் புதிய கட்டுப்பாட்டை விதித்தது.
சாம்சங் மற்றும் ஆப்பிள்
ஸ்மார்ட்போன் உலகில் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் சியோமி நிறுவனத்தின் மீதான இந்தச் சந்தை சக போட்டி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்குப் பெரும் வர்த்தக வாய்ப்பை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள்
மேலும் அமெரிக்காவில் சியோமி மீது தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் பிற நாடுகளிலும் தடை விதிக்கவோ, அல்லது அரசின் நேரடி கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பில் கொண்டு வரவோ அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. இதைச் சியோமி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் என்ன நிலைப்பாடு
ஏற்கனவே சீனாவின் டெலிகாம் உபகரணங்களைத் தயாரிக்கும் ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் தற்போது சியோமி மீது தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை 200க்கும் அதிகமான சீன செயலிகளைத் தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் சியோமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.