அமெரிக்க அரசியலில் தற்போது பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர் வர இருக்கும் நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் தான் இதற்கு காரணம். டிரம்பின் அதிபர் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு தேர்தலாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் வரவிருக்கும் இடைக்கால தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் உள்ள அனைத்து 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 30 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. தற்போது பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சி மிக குறைந்த எண்ணிக்கையிலான பெரும்பான்மையையே கொண்டுள்ளது. எனவெ இந்த தேர்தலில் குடியரசு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லாமல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வசம் பிரதிநிதிகள் சபை சென்றால் டிரம்புக்கு தான் சிக்கல்.

ஒருவேளை ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையை கைப்பற்றினால், டிரம்பிற்கு எதிராக முறையான பதவி நீக்க நடவடிக்கைகளை தொடங்குவதற்கான அரசியல் மற்றும் அரசமைப்பு சட்ட ரீதியான அதிகாரம் கிடைக்கும். அதாவது, அவர்கள் பெரும்பான்மையை நிரூபித்தால், குடியரசு கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
டிரம்ப் தனது முதல் அதிபர் பதவி காலத்தில் இருமுறை பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்க விசாரணைக்கு (Impeached) உட்படுத்தப்பட்டவர். 2019இல் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், 2021இல் நாடாளுமன்ற கட்டிட வன்முறைக்கு பிறகும் பதவி நீக்க முயற்சிகள் நடந்தன. எனினும், செனட் சபையில் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், அவர் இரு முறையும் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெறால் 3-வது முறையாக டிரம்ப் மீதான பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது மட்டுமே டிரம்பை பதவியில் இருந்து நீக்கிவிடாது. ஏனெனில் டிரம்பை உண்மையில் பதவியில் இருந்து அகற்ற வேண்டுமானால், செனட் சபையில் தீர்மானம் நிறைவேற வேண்டும். அங்கே டிரம்புக்கு ஆதரவு இருப்பதால் அதற்கு வாய்ப்பு குறைவு.
ஆனால் நவம்பரில் நட்க்கும் இந்த தேர்தல் டிரம்புக்கும் குடியரசு கட்சிக்கும் சவாலானதாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் டிரம்பின் ஈரான் போர் தொடர்பான செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெல்லவே வாய்ப்பு இருக்கிறதாம்.
இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், அது டிரம்பிற்கு எதிரான மூன்றாவது பதவி நீக்க நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம். ஆனால், அவரை பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்க முடியாது என்றாலும் இது ஒரு பிளாக் மார்க்காக அமைந்துவிடும். மேலும் டிரம்பின் மீதமிருக்கும் ஆட்சி காலத்தில் கடுமையான அரசியல் அழுத்தங்களையும் தொடர் விசாரணைகளையும் ஜனநாயக கட்சி முன்னெடுக்க வழிவகுக்கும்.
வேலைவாய்ப்பின்மை, டெக் நிறுவன பணி நீக்கங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் டிரம்புக்கு ஆதரவாக இருப்பார்களா அல்லது எதிர்க்கட்சியினை நோக்கி செல்வார்களா என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications

