ஈரான் அமெரிக்கா இடையே நிகழும் மோதல் முடிவுக்கு வருவதாக தெரிவதில்லை. கிட்டதட்ட 6 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளும் நடத்தி வரும் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் சாமானிய மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சிரமப்படுகின்றனர், ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கோ கச்சா எண்ணெய் விலையில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் பணத்தை கொட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது. மீண்டும் போர் பதற்றம் ஏற்படும் என்ற அச்சத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் மீண்டும் 100 டாலர்களை தாண்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் மேலும் பெட்ரோல்,டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய எண்ணெய் முதலீடுகளில் பல மில்லியன் கணக்கான டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளதாக CNBC வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. ஈரான் உடனான போர் தொடர்பான டிரம்பின் ஒவ்வொரு அறிவிப்பும் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் இந்த 6 மாதத்தில் டிரம்ப் அதிகமாக கச்சா எண்ணெய் விலையால் பாதிக்கப்படும் எரிசக்தி நிறுவனங்களின் பங்குகளில் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்துள்ளார். பிப்ரவரி 27 ,போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் முதல் ஆகஸ்ட் 31 வரை, டிரம்ப் எண்ணெய் மற்றும் எரிசக்தி முதலீடுகள் மூலம் தோராயமாக 1.5 மில்லியன் டாலர்கள் முதல் 4.4 மில்லியன் டாலர்கள் வரை லாபம் ஈட்டியுள்ளதாக CNBC மதிப்பிட்டுள்ளது.
இதனால் தனது அதிபர் பதவியை டிரம்ப் தவறாக பயன்படுத்துகிறார், வர்த்தகத்தில் லாபம், பார்க்க ஏதுவாக ஈரான் போர் தொடர்பான முடிவுகளை எடுக்கிறார் என பல புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த வர்த்தகங்களை டிரம்ப் நேரடியாக மேற்கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை கூறுகிறது.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டேவிஸ் இங்கிள், டிரம்போ அல்லது அவரது குடும்பத்தினரோ இந்த போர்ட்ஃபோலியோவை இயக்குவதற்கு எந்தவிதமான ஆலோசனைகளையும் வழங்குவது இல்லை என்றும் ,முதலீடு தொடர்பான அனைத்து முடிவுகளும் தனிப்பட்ட மேலாளர்களால் மட்டுமே எடுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
இருந்தாலும் டிரம்பின் முடிவுகள் முன்கூட்டியே மேலாளர்களுக்கு சென்று அதற்கேற்ப வர்த்தகம் நடக்கிறதா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. முன்னதாக டிரம்ப் அமைப்பு ,வெளியிலுள்ள நிதி நிறுவனங்கள்தான் இந்த முதலீட்டு முடிவுகளை கட்டுப்படுத்துவதாக விளக்கம் தந்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது முதல் தாக்குதல் நடத்திய பிறகு பங்கு சந்தை நடந்த முதல் நாளான மார்ச் 2 அன்று, டிரம்பின் கணக்குகள் 8 முக்கிய எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்களில் பங்குகளை வாங்கியுள்ளன. இதன் பின்னர் எண்ணெய் விலை உயர்ந்து இந்நிறுவன பங்குகள் உயர்ந்தன. டிரம்ப் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட உடன் இந்நிறுவன பங்குகள் விற்கப்பட்டன, அப்போது எண்ணெய் விலை சரிந்தது ஆகியவற்றை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையே Transparency International U.S. அமைப்பின் நிர்வாகி ஸ்காட் கிரேடாக் டிரம்பின் போர் நிறுத்த முயற்சிகள் அவரது கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு முடிவுகளுடன் நேரடியாக ஒத்துப்போவது போல் அமைந்துள்ளது, இருந்தாலும், இந்த வர்த்தகங்கள் குறித்து டிரம்புக்கு முன்கூட்டியே தெரியும் என்பதற்கோ அல்லது அவரது கொள்கை முடிவுகளுக்காகவே இந்த வர்த்தகங்கள் நடத்தப்பட்டன என்பதற்கோ எந்தவொரு நேரடியான ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications


