அமெரிக்கா ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. போருக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 50 டாலர்களாக தான் இருந்தது. ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கிய பிறகு கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் ஏப்ரல் மாதம் ஒரு பேரல் 112 டாலர் என உச்சத்தை தொட்டது. இன்று 94 டாலர்களாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா உள்பட பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு கண்டுள்ளது.

எப்போது ஈரான் போர் முடியும் கச்சா எண்ணெய் சப்ளை சீராகி பெட்ரோல், டீசல் விலை குறையும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதலில் அமெரிக்கா உறுதியான வெற்றி பெற்றவுடன், உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்காவில் பெட்ரோல் விலையும் கடுமையாக குறையும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் எண்ணெய் விலைகள் மிக தீவிரமாக குறையும் என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு கேலன் பெட்ரோல் விலை 3 டாலராக குறையும், இறுதியாக அது மேலும் குறைந்து, ஒரு கேலன் 2 டாலருக்கும் கீழ் சரியும் என டிரம்ப் கணித்துள்ளார். மேலும், ஈரான் எக்காலத்திலும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்றும், இந்த மாற்றங்கள் மிக விரைவில் நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர் Make America Great Again என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
அதாவது ஈரான் போர் முடிந்த உடன் உலக சந்தையிலும் அமெரிக்க சந்தையிலும் பெட்ரோல் விலை குறையும் என கணித்துள்ளார். அப்படி என்றால் கச்சா எண்ணெய் விலை சரிந்து பெட்ரோல் விலையும் குறையும் என கூறுகிறார். தற்போது அமெரிக்காவில் 5 டாலர்களாக பெட்ரோல் விலை உள்ளது.
இது மட்டும் நடந்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறையும். பெட்ரோல், டீசல் இந்திய பொருளாதாரத்திலும் சரக்கு போக்குவரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இதன் விலை குறைந்தால் பல பொருட்களின் விலை குறையும். இந்த ஒரு நாளுக்காக தான் மக்கள் காத்திருக்கின்றனர். இருந்தாலும் போர் முடிந்து எப்போது இந்த அளவுக்கு பெட்ரோல் விலை குறையும் என டிரம்ப் அறிவிக்கவில்லை.
ஈரான் , அமெரிக்கா இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டு இருதரப்பும் அமைதிக்கு திரும்பி, போரால் சேதமடைந்த கட்டமைப்புகள் சரி செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு கச்சா எண்ணெய் சப்ளை வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். ஆனால் இது நடக்க பல மாதங்கள் தேவைப்படலாம்.


Click it and Unblock the Notifications


