டொனால்ட் ட்ரம்ப். இவர் பெயரைச் சொன்னாலே அதிரடி அது சர வெடி... என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு தன் பேச்சிலும் செயலில் அதிரடி காட்டும் நபர் தான் ட்ரம்ப்.
என்ன ஒரே பிரச்சனை என்றால், மனிதர் செய்யும் செயல்களின் பின் விளைவுகள் கொஞ்சம் கோரமாக இருக்கும். சில சமயங்களில் அது உலக நாடுகளையும் பாதிக்கும். ஈரான் பிரச்சனை ஒரு சிறந்த உதாரணம்.
இப்போது, சீனாவுக்கே செக் வைக்கும் ரீதியில் ஒரு ட்விட்டைப் பொட்டு எல்லோரையும் திரும்பிப் பார்கக் வைத்திருக்கிறார் நம் டொனால்ட் ட்ரம்ப்.
சீனா வைரஸ்
"இந்த கொரோனா வைரஸ் சீனாவாலத் தான் உலகம் முழுக்க பரவியது" என குற்றம் சுமத்துவது தொடங்கி, சீனாவை கிடைக்கும் கேப்பில் எல்லாம் அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதற்குப் பின்னும், சீனாவை மிரட்டும் தொனியில் பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்.
மிரட்டல் 1
அமெரிக்கா - சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றிப் படித்து இருப்பீர்கள். இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர, கடந்த ஜனவரி 2020-ல் தான் சீனா மற்றும் அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தில், ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும், என்பது தான் டீலின் மிக முக்கிய அம்சம்.
கேன்சல் பண்ணிடுவேன் பாத்துக்குங்க
சில வாரங்களுக்கு முன்பு, ட்ரம்ப் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை, "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை, சீனா வாங்கவில்லை என்றால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன்" என வெளிப்படையாக மிரட்டினார் டொனால்ட் ட்ரம்ப்.
மிரட்டல் அடி 2
சமீபத்தில் "அமெரிக்கா, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்க நாட்டுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எல்லாம் பகீர் கிளப்பினார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
புதிய மிரட்டல்
ஆனால் இப்போது, டொனால்ட் ட்ரம்ப், தான் சொல்வதை செய்தாலும் செய்துவிடுவாரோ என நமக்கு பயம் கிளப்பும் ரீதியில் ஒரு ட்விட் செய்து இருக்கிறார். "அமெரிக்கா, சீனாவிடம் இருந்து முழுமையாக பிரிந்து கொள்வதை (Complete Decoupling) ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கிறோம்" எனச் சொல்லி, எல்லோருக்கும் பகீர் கீளப்பி இருக்கிறார். சீனாவுக்கும் ஒரு செக் வைத்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதிபர் ட்ரம்பின் இந்த ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்:
ராபர்ட் லித்தைசர் (Robert Lighthizer)
ராபர்ட் லித்தைசர் ட்ரம்பின் அதிகாரிகள் வட்டத்தில், வர்த்தகம் தொடர்பான விவரங்களில் முக்கியமானவர். அதோடு அமெரிக்க சீன டிரேட் டீலின் முதல் பகுதியை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். ராபர்ட் சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கமிட்டியில் "வர்த்தக டீலின் படி தான் சீனா நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா பொருளாதாரம் தனித் தனியாக பிரிந்து கொள்வது தற்போது சாத்தியமே இல்லை" எனச் சொல்லி இருந்தார்.
ஒரு வருடம் முன்பு
அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு பெரிய பொருளாதாரம் தனியாக பிரிந்து கொள்வது எல்லாம் ஒரு வருடத்துக்கு முன்பு ஆலோசித்துக் கொண்டிருந்த ஆப்ஷன்கள். இப்போது, அதை ஒரு நல்ல கொள்கை முடிவுகளில் ஒன்றாக கருத முடியாது என ராபர்ட் லித்தைசர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் மறுப்பு
ராபர்ட் லித்தைசர் சொன்ன விஷயங்களை மறுத்து, 19 ஜூன் 2020 காலை, "சீனாவிடம் இருந்து, அமெரிக்க, முழுமையாக பிரிந்து கொள்ளும் (Complete Decoupling) ஆப்ஷன் இன்னமும் இருக்கிறது" என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் போட்டு இருக்கிறார். இது சர்வதேச அளவிலும், குறிப்பாக சீனாவிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
இரு பெரும் பொருளாதாரம்
அமெரிக்காவும், சீனாவும் ஒன்றாக இணைந்து மற்ற நாடுகளுக்கு தோல் கொடுக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் கூட, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் சரிந்தால் உலக பொருளாதாரம் மேலும் ஆட்டம் கண்டு விடுமே! இதை எல்லாம் மனதில் கொண்டு ட்ரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் செயல்பட்டால் நல்லது.