அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை நாளாக, சீனா மீதான கோபத்தை பல்வேறு தருணங்களில், பல்வேறு கூட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
இப்போது திடீரென, அதிபர் ட்ரம்பின் கோபம் எல்லாம், கம்பெனிகள் மீது திரும்பி இருக்கிறது.
அமெரிக்க கம்பெனிகள், மீண்டும் அமெரிக்காவுக்கே வர வேண்டும் இல்லை என்றால்... என வெளிப்படையாக மிரட்டி இருக்கிறார். என்ன மிரட்டல்? வாங்க பார்ப்போம்.
சீன வெறுப்பு
கொரோனா வைரஸால், அமெரிக்காவில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்குக் காரணம் சீனா தான்... என ஒரு பக்கம் உரக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் இப்போது சீனாவை விட்டு வெளியேறும் அமெரிக்க பெரு நிறுவனங்கள் மீது தன் கோபத்தை திசை திருப்பி இருக்கிறார்.
சப்ளை சிக்கல்
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் அங்கு முதலில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல நிறுவனங்களின் உற்பத்தியும், சப்ளை செயினும் பயங்கரமாக பாதிக்கப்பட்டன. ஆகையால் இனி சீனாவில் மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்து பயன் இல்லை என்கிற முடிவுக்கு பல நிறுவனங்களும் வந்துவிட்டன.
உற்பத்தி
ஆப்பிள் போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை, சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நியூ யார்க் போஸ்ட் பத்திரிகையும் உறுதி செய்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தன் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது.
ட்ரம்ப் பேச்சு
சமீபத்தில் Fox Business சேனலுக்கு அதிபர் ட்ரம்ப் கொடுத்த பேட்டியில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது "வெளிநாடுகளில் பொருட்களை தயாரிப்பதற்காக, ஆப்பிள் போன்ற கம்பெனிகள் மீது வரி விதிக்க வேண்டியது தான். அமெரிக்கா, அவர்களுக்கு அதிகம் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் (கம்பெனிகள்) தான் நமக்காக செய்ய வேண்டும்" என பகீர் கிளப்பி இருக்கிறார்.
சீன உறவு
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா உடனான உறவை முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அதனால் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் மிச்சமாகும் எனச் சொன்ன ஒற்றை வரியால், உலக பங்குச் சந்தைகள் எல்லாம் கதி கலங்கிப் போயின.
நல்ல வேளை சனிக்கிழமை
இன்று நல்ல வேளையாக சனிக்கிழமையாகப் போய்விட்டது. இல்லை என்றால் அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு, உலக பங்குச் சந்தைகள் மீண்டும் ஒரு பெரிய அதிர்வலையைச் சந்தித்து இருக்கும், ஒரு சில சதவிகிதம் பங்குச் சந்தைகள் சரிந்து இருக்கும். இருப்பினும் திங்கழ்கிழமை இந்த வார்த்தைகளுக்கான எதிரொலி காத்திருக்கும் என எதிர்பார்க்கலாம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
சாத்தியமா
உலகமயமாக்கல் என்கிற தத்துவத்தை, உலகத்துக்கு வலுக்கட்டாயமாக தினித்ததே அமெரிக்கா தான். ஆனால் இன்று, அதே அமெரிக்கா, தன்னையும், தன் மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய, அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வர வேண்டும், வேறு நாடுகளில் உற்பத்தி ஆலைகளைப் போட்டால் வரி விதிப்பேன் என மிரட்டும் அளவுக்கு இறங்கி இருக்கிறது. இதைப் பார்க்கவே வேடிக்கை கலந்த முரணாக இருக்கிறது.