நியூ யார்க்: இந்தியா, சீனா போன்ற பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பு அளித்து வரும் மானியங்களை ரத்துச் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஃபார்கோ நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
சில நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்று வருவதாக நாம் கூறிவருகிறோம். அவற்றில் பல நாடுகள் இன்னும் முதிர்ச்சியடைந்த நிலையில் தான் நாம் அவர்களுக்கு மானியங்களை அளித்து வருகிறோம். இது பைத்தியக்கார தனமாக உள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த மானியங்கள் மூலம் வளர்ச்சி பெறுவதைக் கண்டு நாம் வியந்துகொண்டு இருக்கிறோம் என்கிறார் டிரம்ப்.
மானியத்தால் வளர்ச்சி
மானியங்களைப் பெற்றுக்கொண்டு தங்களை வளரும் நாடுகள் என்று இந்தியா, சீனா போன்ற நாடுகள் கூறி வருகின்றனர் என்றார்.
நாம் அவர்களுக்கு மானியம் என்ற பெயரில் பணம் அளித்து வருகிறோம். இது பைத்தியக்கார தனமானது. நாம் இதை நிறுத்த இருக்கிறோம், நிறுத்துவோம் என்றும் டிரம்ப் கொக்கரித்துள்ளார்.
அமெரிக்காவும் வளரும் நாடே
அமெரிக்காவும் வளரும் நாடு தான். எனவே வளர்ந்த நாடு என்பதில் இருந்து வெளியேறி வளரும் நாடாக அமெரிக்காவை அறிவிக்க வேண்டும். அதன் பின் நாம் பிற நாடுகளை விட வேகமான வளர்ச்சியினை அடைவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக மையம்
உலக வர்த்தக மையம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாகச் செயல்பட்டு வருகிறது. அது எதற்கு என்றே பலருக்கு தெரியவில்லை, சீனாவைச் சிறந்த பொருளாதாரம் படைத்த நாடாக மாற்றியுள்ளது.
வர்த்தகப் போர்
சீனா மீது வர்த்தகப் போர் தொடுத்து வரும் நிலையில் சீன பிரதமர் ஜீ ஜிபிங்கின் விசிறி நான், நான் அவரிடமே ‘நாம் நியாயமாக இருக்க வேண்டும்' எனக் கூறிவிட்டேன்.
ஒவ்வொரு ஆண்டும் 500 பில்லியன் டாலரினை சீனா அமெரிக்காவில் இருந்து கொண்டு சென்று தங்களைக் கட்டமைத்துக்கொள்வதை நம்மால் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
உலக நாடுகள் அபராதம் செலுத்த வேண்டும்
பின்னர்த் தங்கள் நாடுகளின் வளத்தினைப் பெருக்க அமெரிக்காவைப் பயன்படுத்தி வரும் நாடுகள் அதற்கான கட்டணத்தினை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும், உலகை மிக உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.