ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து தான் வருகிறது. இருதரப்பும் சமாதானத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறிகளே தென்படாமல் இருக்கிறது. ஒரு புறம் ராணுவ தாக்குதல்கள் நடக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக ஈரானுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானின் மிகவும் பலம் வாய்ந்த நிலத்தடி அணுசக்தி தளமான பிகாக்ஸ் மவுண்டைன் (Pickaxe Mountain) மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் மீது பிப்ரவரி மாதம் முதலே அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதையும் புதிதாக உருவாக்கப்படுவதையும் தடுப்பதே தங்களது பிரதான நோக்கம் என தெரிவித்தார். ஈரானிடம் அணு ஆயுதம் மட்டும் இருந்திருந்தால், தங்களால் அங்கு நீண்ட காலம் நின்றிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஈரானிடம் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், பிகாக்ஸ் மவுண்டைன் தளம் உடனடியாக தாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரானிடம் அணுசக்தி இருக்க கூடாது என்பது தான் அமெரிக்காவின் நிலைப்பாடு. இதனை காரணமாக கூறி அவ்வப்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும், பின்னர் சரியாகிவிடும். ஆனால் இந்த ஆண்டு தொடங்கிய தாக்குதல் முடிவில்லாமல் செல்கிறது.
முன்னதாக ஈரான் ராணுவ இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் சில நாட்களாக தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்ற. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு தொடர்புடைய தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெக்காவின் இந்த தொடர்ச்சியான ராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற தன்மையை மீண்டும் கொண்டு வருவதாகவும் ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் பிகாக்ஸ் மவுண்டைன் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டிரம்பின் எச்சரிக்கை நிலைமையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. பிகாக்ஸ் மவுண்டைன் என்பது ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான நதாண்ஸ் பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பகுதியாகும். இந்த தளம் மலைகளுக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் மிகவும் பலமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பான ரகசிய செயல்பாடுகளுக்காகவும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பதற்காகவும் இதனை பயன்படுத்தி வருவதாக மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் கருதுகின்றன. எனினும், இது அமைதியான அணுசக்தி தேவைகளுக்காக மட்டுமே என ஈரான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ரகசிய நிலத்தடி அணுசக்தி தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற டொனால்ட் டிரம்பின் பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பையும், மத்திய கிழக்கில் போர் பதற்றத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications


