தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிகளைத் துருக்கி நாட்டில் பயன்படுத்தவும், வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
துருக்கி மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிகள் சரிசெய்ய முடியாத பாதிப்பையும், அதிகப்படியான பணப் பரிமாற்ற ஆபத்துகளையும் உருவாக்கும் காரணத்தால் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சி பயன்படுத்தவும், அதை வைத்துப் பொருட்கள் மற்றும் சேவை பெறுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
துருக்கி மத்திய வங்கி
துருக்கி மத்திய வங்கி பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி மீதான தடை குறித்துச் சிறப்பு அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துகளை வைத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேமெண்ட் செலுத்தப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.
கிரிப்டோ பேமெண்ட்
இதன் மூலம் கிரிப்டோ பேமெண்டை ஏற்கும் வர்த்தகங்கள் உடனடியாக இந்தப் பேமெண்ட் முறையை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இது கிரிப்டோ சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி வர்த்தகம்
உலகளவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இதேவேளையில் கிரிப்டோகரன்சி வைத்து பல்வேறு குற்றங்கள் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒவ்வொரு நாட்டின் அரசே தனது நாணய மதிப்பின் அடிப்படையாகக் கொண்டு ஒரு கிரிப்ரோகரன்சியை உருவாக்கினால் பாதுகாப்புடன், பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் முடியும் எனக் கருத்து நிலவி வருகிறது.
ரிசர்வ் வங்கி திட்டம்
இதன் அடிப்படையில் இந்தியாவும் புதிதாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளதாகச் சில மாதங்களுக்கு முன்பு கருத்து நிலவியது. இதற்காக ரிசர்வ் வங்கியின் ஒரு முக்கியக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் டிஜிட்டல் கரன்சி குறித்து முடிவுகளை அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான B.P.Kanungo ஜனவரி மாதம் தெரிவித்தார்.
கடுமையான கிரிப்டோகரன்சி மசோதா
இதேவேளையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலகிலேயே மிகவும் கடுமையான கிரிப்டோகரன்சி மசோதாவை உருவாக்கி வருவதாகவும் தகவல் நிலவுகிறது. இதன் மூலம் இந்தியா கிரிப்டோகரன்சியை ஒருபோதும் ஏற்காது என் தெரிகிறது.
அதீத கட்டுப்பாடு
இப்புதிய மசோதா மூலம் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்வது மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி வைத்திருப்பதும், கிரிப்டோகரன்சி விநியோகம் செய்வது, கிரிப்டோகரன்சி உருவாக்குவதும், கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்வது, கிரிப்டோகரன்சி வைத்துப் பொருட்களை வாங்குவது மற்றும் பணத்திற்குப் பதிலாகக் கிரிப்டோகரன்சியை ஏற்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பிட்காயின் மதிப்பு
நீண்ட காலத்திற்குப் பின் பிட்காயின் மதிப்பு இந்த வாரம் சிறப்பான வளர்ச்சி அடைந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி வர்த்தகத்தில் 64,829.14 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது, ஆனால் தற்போது துருக்கு மத்திய வங்கியின் தடை அறிவிப்பால் இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 2 சதவீதம் வரையிலான சரிவை எட்டியுள்ளது. இதன் மூலம் தற்போது ஒரு பிட்காயின் மதிப்பு 61,488.41 டாலரை அடைந்துள்ளது.