உலகில் பிற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இதற்கு மிக முக்கியக் காரணம் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வேக்சின் மற்றும் மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மற்றும் வர்த்தக ஊக்குவிப்புத் திட்டங்கள் தான்.
ஆனால் அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் அடுத்தடுத்து பாதித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் அதிகளவிலான தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் தரவுகள் வெளியாகி அமெரிக்கச் சந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லாதோர்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அந்நாட்டு அரசு ஒவ்வொரு மாதமும் நிதியுதவி அளித்து வருகிறது. கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் அடிப்படை சேவைகளுக்கே கஷ்டப்படும் பலருக்கு இந்த உதவித் தொகை பெரிய அளவில் உதவி செய்துள்ளது. இதேவேளையில் அமெரிக்க அரசு வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை இதன் மூலம் துல்லியமாக கணக்கிட முடியும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
அமெரிக்கச் சந்தை
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றுப் பரவி வரும் நிலையிலும் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வரையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் வைரஸ் தொற்றும் அதிகரித்துள்ளது, இதேபோல் வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
3,53,000 பேருக்கு வேலை இல்லை
இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 3,53,000 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தின் 3,49,000 எண்ணிக்கையை விடவும் அதிகம் என அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 4 வாரத்திற்கு முன்பு இதன் எண்ணிக்கை 3,66,500ல் இருந்து படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து 5 வார உயர்வை பதிவு செய்துள்ளது.
டெல்டா வகை வைரஸ் தொற்று
அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றுப் பரவி வரும் நிலையில் குறைக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் விதிமுறைகள் அனைத்தும் திரும்பவும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது, இதன் சங்கிலி பாதிப்பாக வேலைவாய்ப்பு துறையும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
தென் கொரியா வட்டி உயர்வு
இந்தச் சூழ்நிலையில் தான் தென் கொரியாவின் மத்திய வங்கியான பேங்க் ஆப் கொரியா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இப்புதிய வட்டி உயர்வு மூலம் 0.50 சதவீதமாக இருந்த பென்ச்மார்க் வட்டி விகிதம் தற்போது 0.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னணி பொருளாதார நாடுகளில் தென் கொரியா தான் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
இதை தொடர்ந்து இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் இன்று முக்கியமான தகவல்களைத் தனது பேச்சில் வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக டாலர் மதிப்பு, பத்திர சந்தை முதலீடு என அனைத்தும் மந்த நிலைக்குச் சென்றுள்ளது.
பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்
ஜெர்மனி நாட்டிலும் செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் நுகர்வோர் அளவீடு குறைந்தும், பணவீக்கம் அளவீடுகள் அதிகரிக்கும் எனக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் சிறிய அளவிலான கொள்கை அல்லது வட்டி விகித மாற்றங்களை அறிவித்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.