ஐக்கிய அரபு அமீரகம் , ஈரானுடன் இனி எந்த உறவும் இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 5 மாதங்களாக சூழ்நிலை சரியில்லை. ஈரான் போர் காரணமாக பதற்றமான சூழலே நிலவுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை குறி வைக்கிறது. இந்நிலையில் ஈரானுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகள், வணிக பரிமாற்றங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது, ஈரான் இரண்டு ஏவுகணைகளை வீசியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் கடல் வழி போக்குவரத்தை இலக்காக கொண்டு ஏவப்பட்டதாக அமீரக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஏவுகணைகள் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக கருதப்படும் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக அமீரக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் ஜெபல் அலி துறைமுகம் வழியாக, அபுதாபிக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து ஜூன் மாத இறுதியில் தான் மீண்டும் தொடங்கியது.
முன்னதாக, மத்திய கிழக்கு போர் தொடங்கிய சில நாட்களில், மார்ச் மாத தொடக்கத்தில் நேரடி கப்பல் போக்குவரத்தை அமீரகம் நிறுத்தியிருந்தது. சமீபத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான அட்னாக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமீரகம் குற்றம் சாட்டியிருந்தது. மே 4ஆம் தேதி புஜைரா துறைமுகத்தில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்த ஏவுகணை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அசாதாரண சூழலில், நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு செயல்களையும் உறுதியுடன் எதிர்கொள்ளவும், அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் மத்திய கிழக்கின் சமீபத்திய நிலவரங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமீரகத்தின் உள்நாட்டு அமைச்சகம், மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதோடு, இயல்பு நிலைக்கு திரும்பவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த வர்த்தக தடை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த எந்த தகவலும் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications

