ஹைதராபாத் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை, சைபராபாத் காவலர்கள் என்கவுண்டர் செய்ததாகச் சொல்கிறார்கள். நாட்டின் பல பகுதி மக்களும் அதை வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
மறு பக்கம், ஒரு மனித உயிரை பறிக்கும் உரிமை காவலர்களுக்கு இல்லை என மனித உரிமை பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஹைதராபாத் மருத்துவர் வன் கொடுமை மற்றும் கொலை வழக்கில் நடந்த என்கவுண்டர் சரியா தவறா என்பதை இங்கு பேச வரவில்லை.
மாறாக ஒரு உலக புகழ் பெற்ற நிறுவனத்திலேயே நிறைய பாலியல் புகார்கள் வந்திருப்பதைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
நிறுவனம் + புகார்
நாம் பேசிக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் பெயர் உபர். ஆம் டாக்ஸி அக்ரிகேட்டார் நிறுவனமான உபர் தான். அமெரிக்காவில், கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 1.3 பில்லியன் ரெய்டுகள் போயிருக்கிறார்கள் உபர் ஓட்டுநர்கள். அதில் 3,000 பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் வந்திருக்கிறதாம்.
அறிக்கை
உபர் நிறுவனம் நேற்று (டிசம்பர் 05, 2019, வியாழக்கிழமை) தன் முதல் அமெரிக்க பாதுகாப்பு அறிக்கையை (US Safety Report) வெளியிட்டது. இந்த 84 பக்க அறிக்கையில் தான், மேலே சொன்ன தரவுகளைச் விளக்கி இருக்கிறார்கள். இந்த 3,000 பாலியல் வன்கொடுமை புகார் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 16 சதவிகிதம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓட்டுநர்களுக்கே சிக்கல்
உபர் நிறுவனத்தின் பார்வைக்கு வந்து இருக்கும் பாலியல் வன் கொடுமை புகார்களில் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள், ஓட்டுநர்களிடம் இருந்து வந்தவை. அதாவது உபர் டாக்ஸியை புக் செய்த பயணிகள், ஓட்டுநர்களை பாலியல் வண் கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளானவர்கள், உபர் நிறுவனத்திடமே புகார் கொடுத்து இருக்கிறார்கள்.
லண்டன் லாக்
சமீபத்தில் தான், உபர் நிறுவனம், தன்னுடைய டாக்ஸிகளில் பயணிகளை ஏற்றிக் கொள்வதற்கான உரிமத்தை ரத்து செய்தது லண்டன் அரசு. இந்த உரிம ரத்துக்கு, உபர் நிறுவனம், பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்யவில்லை எனக் காரணம் சொன்னது லண்ட்ன அரசு. அந்த உரிமத்தை மீண்டும் பெற மேல் முறையீடு செய்ய இருப்பதாகச் சொல்லி இரண்டு வாரங்களில் தான் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது உபர் நிறுவனம்.
நடவடிக்கை
உபர் நிறுவனம் உலகம் முழுக்க சுமாராக 70 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் இருந்தும், உபர் ஓட்டுநர் தவறாக நடந்து கொள்வது தொடர்பாக பல புகார்களும் எழுந்த வண்ணமே இருந்தன. வழக்குகளும் அடிக்கடி தொடுக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு தான், உபர் நிறுவனம், ஆண்டு தோறும் ஒரு பாதுகாப்பு அறிக்கையை வெளியிடுவதாகச் சொல்லி சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது சொன்ன படி தன் முதல் அமெரிக்க பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
சரி பார்ப்பு
இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்னைகளைக் குறைக்க, உபர் நிறுவனத்தோடு இணைந்து டாக்ஸி ஓட்ட விரும்பும் ஓட்டுநர்களின் பின் புலங்களை, உபர் நிறுவனம் ஆராய்ந்து இருக்கிறார்களாம். 2017 & 2018-ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் இந்த பின் புல சரி பார்ப்பில் தேறவில்லையம்.
பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்
புதிதாக உபர் நிறுவனத்தில் வேலைக்கு சேற இருப்பவர்கள் தவிர, ஏற்கனவே உபர் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களின் பின் புலங்களையும் சரி பார்த்தார்களாம். இப்படி ஏற்கனவே உபரில் ஓட்டுநர்களாக இருப்பவர்களில் 40,000 பேரின் பின்புலம் சரியில்லை என வெளியேற்றி இருக்கிறார்களாம்.
போதாது
ஆனாலும் அமெரிக்க டாக்ஸி வரைமுறையாளர்கள் மற்றும் அரசு அமைப்பினர்கள், உபரின் இந்த பின்புல சரி பார்ப்பு நடவடிக்கைகள், எக்ஸ்ட்ரா ஸ்க்ரீனிங்குகள் எல்லாம் போதாது எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களாம். அமெரிக்காவில் இருக்கும் சில மாகாணங்களோ, உபர் ஓட்டுநர்களை finger printing செய்யச் சொல்கிறார்கள்.
நியூ யார்க்
தற்போது, அமெரிக்காவில் நியூ யார்க் மாகாணத்தில், டாக்ஸி ஓட்டுநர்கள் தங்கள் கை ரேகைகளைக் முதலில் கொடுத்து விட வேண்டுமாம். அதன் பிறகு வழக்கம் போல மற்ற டாக்குமெண்ட்கள் கொடுப்பது மற்றும் தேர்வுகளை சந்திப்பது என எல்லாவற்றையும் செய்ய வேண்டுமாம். ஆனால் உபர் நிறுவனமோ தங்களின் பின் புல சரிபார்ப்பே போதுமானது எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில்
அமெரிக்கா போன்ற வளர்ந்த, வெளிப்படைத் தன்மையும், தனி மனித உரிமைகள் அதிகம் பாதுகாக்கபப்டும் முன்னேறிய நாட்டிலேயே, உபர் டாக்ஸியில் ஆண்டுக்கு 3,000 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அப்படி என்றால், இந்தியா போன்ற, அதிக கலாச்சாரம் அழுத்தங்கள் கொண்ட, வளரும் நாடுகளில், எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும். அதில் எத்தனை சொற்ப வழக்குகள் முறையாக பதியப்படுகின்றன, அதிலும் எத்தனை வழக்குகளுக்கு முறையாக தீர்வு காணப்படுகின்றன என்பதெல்லாம் நம் நீதி தேவதைக்குத் தான் வெளிச்சம்.