லண்டன்: உலகின் டாப் 10 பொருளாதாரங்களில் ஒன்றான பிரிட்டனிலேயே கார் வியாபாரம் படு பாதாளத்தைத் தொட்டு இருக்கிறது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த கொரோனா வைரஸ், இங்கிலாந்து பொருளாதாரம் தொடங்கி கடைக் கோடி இந்தியனின் பொருளாதாரம் வரை சிதைத்து இருக்கிறது, மேலும் சிதைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த கொரோனா வைரஸால் இங்கிலாந்து மட்டும் இல்லாமல் மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் கூட கார் விற்பனையில் செம அடி வாங்கிக் இருக்கிறதாம்.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் கடந்த 1946-ம் ஆண்டுக்குப் பிறகு வரலாறு காணாத வகையில் கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில் கார்களின் விற்பனை சரிந்து இருக்கிறதாம். கடந்த ஏப்ரல் 2020-ல் வெறும் 4,321 புதிய கார்கள் மட்டுமே புதிதாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். இதை Society of Motor Manufacturers and Traders (SMMT) என்கிற அமைப்பு உறுதி செய்து இருக்கிறது.
ஒப்பீடு
கடந்த ஏப்ரல் 2019-ல் இங்கிலாந்தில் 1,61,000 கார்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் இந்த ஏப்ரல் 2020-ல் வெறும் 4,321. இது கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய வீழ்ச்சி எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை சதவிகிதத்தில் பார்த்தால் 97.3 % சரிவாம்.
ஐரோப்பிய நாடுகள்
இங்கிலாந்தைப் போல பிரான்ஸ் நாட்டில், புதிய கார்கள் பதிவு கடந்த ஏப்ரல் 2020-ல் 88.8 % சரிந்து இருக்கிறதாம். இத்தாலியில் 97.5 சதவிகிதம் புதிய கார்கள் பதிவு சரிந்து இருக்கிறது என Society of Motor Manufacturers and Traders (SMMT) அமைப்பு கணக்கு சொல்கிறது.
கொரோனா
கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல நாடுகளும், லாக் டவுன் செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தில் கடந்த மார்ச் 23 முதல் லாக் டவுன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த லாக் டவுன் தான் கார்கள் விற்பனை இந்த அளவுக்கு சரிய முக்கிய காரணம் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அந்த 4,321 கார்
லாக் டவுன் காலத்தில் எப்படி டெலிவரி மற்றும் கார் பதிவு என்று கேட்கிறீர்களா..? அந்த கார்களில் பெரும்பாலானவைகள் அத்தியாவசியத் தேவைகளுக்காக அரசுத் துறைகள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்த டெலிவர்கள் தானாம். ஆகையால் தான் இந்த 4,321 புதிய பதிவுகளாவது வந்ததாம்.