உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் ஒன்றான பிரிட்டன் பொருளாதாரம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் தொடர்ந்து மோசமான நிலைக்குச் சென்று வருகிறது. கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் தொடர்ந்து வேகமாக மீண்டு வரும் நிலையில் பிரிட்டன் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
ஐரோப்பியக் கூட்டணி நாடுகளில் இருந்து தனி நாடாகப் பிரிட்டன் பிரிந்த நாள் முதல் பல்வேறு வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் அடைந்து வரும் நிலையில் கொரோனா தொற்றும் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை அடைந்து வருகிறது.
இதன் எதிரொலியாகப் பிரிட்டன் பொருளாதாரம் கடந்த 300 ஆண்டுகளில் கண்டிராத மிகவும் மோசமான நிலையை 2020ல் அடைந்துள்ளது.
பிரிட்டன் பொருளாதாரம்
கொரோனாவால் பிரிட்டன் பொருளாதாரம் 2020ல் -9.9 சதவீதம் அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது, இது 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடி காலகட்டத்தை விடவும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். இதுமட்டும் அல்லாமல் 2021லும் பிரிட்டன் நாட்டில் இன்னும் பல பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Great Frost நிகழ்வு
இதேவேளையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் விவசாயம் மட்டுமே முக்கிய வர்த்தகமாக இருந்த காலகட்டமான 1709 ஆண்டில் ஏற்பட்ட Great Frost நிகழ்வுக்குப் பின் பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது 2020 கொரோனா பாதிப்பில் தான் எனப் பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
3வது லாக்டவுன்
2020ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வரத் துவங்கிய போது பிரிட்டன் நாட்டில் 3வது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக்டவுன் அறிவிப்பில் பள்ளிகள், உணவகங்கள், அத்தியாவசிய தேவை அல்லாத அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டது பிரிட்டன் அரசு.
ஐரோப்பாவில் லாக்டவுன்
குறிப்பாக நார்தன் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரிட்டன் நாட்டில் பறக்கும் விமானங்களுக்குப் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. மேலும் பிரிட்டன் எதிரொலி காரணமாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.