கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் உலக நாடுகளுக்கு ரஷ்யா - உக்ரைன் போர் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் ஆகியவற்றுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு உற்பத்தி பொருட்களின் விலையைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. இதனால் உலக நாடுகளில் பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது, அமெரிக்காவின் பணவீக்கம் பிப்ரவரி மாதம் 7.9 சதவீதம் அதிகரித்து 40 வருட உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது பிரிட்டன் பணவீக்கம் 30 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் பிப்ரவரி மாதம் எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்ந்து 30 வருட உச்சத்தை எட்டியது, இந்தப் பணவீக்க உயர்வு பிரிட்டன் நாட்டின் குடும்பச் செலவுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் நிதியமைச்சரும், இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பணவீக்க கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்.
நுகர்வோர் பணவீக்கம்
பிரிட்டன் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 5.5 சதவீதமாக இருந்த நிலையில் பிப்ரவரி மாதம் அந்நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு 6.2 சதவீதமாக உயர்ந்து 30 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவிப்பின் படி மார்ச் 1992 க்குப் பிறகு அதிகப்படியான பணவீக்கம் பிப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது.
எனர்ஜி செலவுகள்
இக்காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் எனர்ஜி செலவுகள் அதாவது மின்சாரம் முதல் எரிபொருளுக்காகச் செலவு செய்யும் அளவீடு கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட உயர்வு தான்.
உணவு விலை
எனர்ஜி செலவுகளைத் தொடர்ந்து உணவு விலையும் அதிகரித்து வந்ததன் மூலம் அந்நாட்டு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர் எனப் பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
8 சதவீதம்
மேலும் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 8 சதவீதம் வரையில் அதிகரிக்கும் எனப் பாங்க் ஆப் இங்கிலாந்து கணித்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன் மக்கள் தொடர்ந்து கடுமையான சூழ்நிலையை அடுத்த 3 மாதத்திற்கு எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.