பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரத்தில் பிரிட்டனில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் அக்டோபர் மாத வேலைவாய்ப்புத் தரவு அந்நாட்டு அரசைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனில் அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 வருட உயர்வை அடைந்துள்ளது. இதனால் பிரிட்டனில் சுமார் 2,41,000 பேர் கூடுதலாக வேலைவாய்ப்பு தேடும் நிலையில் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டு உள்ளதாகப் பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை பிரிட்டனில் 17 லட்சமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அரசு நவம்பர் மாதம் தான் கொரொனா காரணமாக நாடு முழுவதும் 2வது முறையாக லாக்டவுன் விதிக்கப்பட்டது, ஆனால் அக்டோபர் மாதமே இந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மேலும் இந்த வாரத்தில் அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகப் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் பிரிட்டன் நாட்டில் அதிகப்படியாக 2,43,000 பேர் வேலைவாய்ப்புகளை இழந்து 2009ஆம் ஆண்டுச் சர்வதேச நிதிநெருக்கடி காலகட்டத்திற்கு அடுத்தபடியாக மோசமான நிலையை அடைந்துள்ளது இந்த அக்டோபர் காலாண்டு தான்.
மேலும் இதே காலகட்டத்தில் அரசிடம் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அளிக்கப்படும் சலுகையைப் பெற சுமார் 27 லட்சமாக உள்ளது. பிப்ரவரி காலாண்டை விடவும் அக்டோபர் காலாண்டில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கையில் 1,10,000 வரையில் அதிகரித்துள்ளது.