ரியாத், சவுதி அரேபியா: கடந்த ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான முதல் காலாண்டில் சவுதி அரேபியா நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 12.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறதாம்.
அதாவது சவுதியில் 100 பேர் வேலை பார்க்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால் 12.5 பேருக்கு வேலை இல்லை அல்லது அவர்கள் தகுதிக்கு வேலை கிடைக்கவில்லையாம்.
நம்மூர் இளைஞர்கள், படித்து முடித்ததும் கையில் இருக்கும் சொத்து பத்துக்களை எல்லாம் விற்று சவுதிக்குச் சென்று, உழைத்து ஷேக்காக திரும்பி வர நினைப்பவர்களுக்கு இனி சவுதியில் வேலை இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
உச்சம்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் தான் சவுதி அரேபியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 13 சதவிகிதம் என்கிற உச்சத்தில் இருந்ததாம். அதாவது வேலை பார்க்க தயாராக இருக்கும் 100 பேரில் 13 பேருக்கு வேலையே இல்லை. இந்த வேலை இல்லா திண்டாட்டத்தை ஆண் பெண் எனப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். சவுதியில் 100-க்கு 6.6 ஆண்களுக்கு வேலைவாய்ப்பே இல்லையாம். அதே போல 100-க்கு 31.7 பெண்களுக்கு வேலை இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
எல்லோரையும் சேர்த்து
மேலே சொன்னது சவுதியில் வாழும் சவுதி அரேபியர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக எடுத்திருக்கும் கணக்காம். இதுவே மற்ற பல நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பிழைக்க வந்தவர்களையும் சேர்த்து ஒரு கணக்கை தனியாக வைத்திருக்கிறார்களாம். அதன் படிப் பார்த்தால் (Saudi + Non Saudi) சேர்த்து வேலை இல்லா திண்டாட்டம் 5.7 சதவிகிதமாக இருக்கிறதாம். (100 பேரில் 5.7 பேருக்கு வேலை இல்லை).
எண்ணிக்கை
சவுதி அரேபிய நாட்டில் வேலை பார்க்கும் சவுதி அரேபியர்களின் எண்ணிக்கை 31,12,029 பேராக (ஏப்ரல் - ஜூன் காலாண்டில்) அதிகரித்திருக்கிறார்களாம். அதே நேரத்தில் சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காத சவுதி அரேபிய மக்களின் எண்ணிக்கையும் 9,45,323 ஆக அதிகரித்திருக்கிறதாம். இதோடு 15 வயதுக்கு மேற்பட்ட வேலை பார்க்கத் தயாராக இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் 0.3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறார்களாம்.
என்ன காரணம்
தனியார் நிறுவனங்கள் பலவும் சவுதி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து கடையை காலி செய்வது, சவுதி அரசியல் நிலைப்பாடு, புதிய வரிகள் மற்றும் கட்டணங்கள் விதிக்கப்படுவது எல்லாம் ஒத்து வராததால் கம்பெனிகளை வேறு நாடுகளுக்கு மடை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். ஒட்டு மொத்தத்தில் தனியார் துறை, சவுதியில் இருந்து தெறித்து ஓடுகிறார்களாம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், சவுதி அரேபிய நாட்டில், தனியார் துறைகளில் வேலை பார்த்து வந்த சவுதி நாட்டைச் சேர்ந்த மக்கள் சுமார் 2 சதவிகிதம் பேர் தங்கள் வேலையில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள் அல்லது தங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்களாம்.
பெண்கள்
அதோடு பெண்கள் வேலைக்கு வருவதும் சவுதி அரேபியாவில் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறதாம். முன்னாள் அரசர் அப்துல்லா காலத்திலேயே ரீட்டெயில் கடைகளில் சில வேலைவாய்ப்புகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அது போக புதிய இளவரசர் முகம்மது வந்த பின் பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதி கொடுத்திருப்பதால் பெண்கள் வேலைக்கு வருவது பெரிய அளவில் அதிகரித்திருக்கிறதாம். இதனால் சவுதி அரேபியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்.