கொரோனா வைரஸ் பிரச்சனையால் உலக பொருளாதாரம், நாளுக்கு நாள் செம அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
இதில் சீனா மற்றும் அமெரிக்கா வேறு தொடர்ந்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
கொரோனா பிரச்ச்னையை விட, இந்த இரண்டு பெரிய நாடுகளும் போடும் சண்டை, உலக பொருளாதாரத்தில், பெரிய அதிவலைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
டிரேட் டீல்
2018-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் வர்த்தகப் போருக்கு போட்ட டிரேட் டீல் வேறு, பஞ்சாயத்துக்கு மத்தியில் வந்து போகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்கா, சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன் என மிரட்டினார்.
உறவை முறித்துக் கொள்வேன்
அதன் பின், சில தினங்களுக்கு முன்பு, "அமெரிக்கா, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார அறிஞர்களே கவலைப்படும் அளவுக்கு பகீர் கிளப்பினார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
சீன தரப்பு
இப்படி ட்ரம்ப் ஆவேசமாக ஏதாவது பேசும் போது எல்லாம், சீன தரப்பு, கூடுமான வரை மெளனமாக இருந்து விடுகிறார்கள். இல்லை என்றால், புத்திசாலித்தனமாக நட்புக் கரம் நீட்டி விடுகிறார்கள். ஆனால் ட்ரம்ப், சீனாவை விடுவதாகத் தெரியவில்லை.
புதிய சட்டம்
அமெரிக்க சட்டத் துறை வல்லுநர்கள் & அமெரிக்க அரசு அதிகாரிகள், ஒரு சட்டத்தை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார்களாம். அந்த சட்டப்படி, சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க கம்பெனிகளளுக்கு வரிச் சலுகை உட்பட, சில மானியங்களை வழங்க இருக்கிறார்களாம்.
ட்ரம்ப் பேச்சு
சில வருடங்களாகவே, வெளிநாடுகளுக்குச் சென்ற உற்பத்தி ஆலைகளை எல்லாம், அமெரிக்காவுக்கே மீண்டும் கொண்டு வருவேன் எனச் சொல்லி கொண்டிருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இப்போது கொரோனா காலத்தில் கூட உணவு, மருந்து போன்றவைகளுக்கு சீனாவை நம்பி இருப்பதால், ட்ரம்பின் ஐடியாவுக்கு இப்போது புதிய உந்து சக்தி கிடைத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ட்ரம்ப் லட்சியம்
"அமெரிக்காவுக்குத் தேவையானதை, அமெரிக்காவிலேயே தயாரிப்போம். அதன் பிறகு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்" எனச் சொல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இது நல்ல திட்டம் போலத் தானே தெரிகிறது, அதை செயல்படுத்துவதில் என்ன சிக்கல்..? என்று கேட்கிறீர்களா.
எப்படி முன் எடுத்துச் செல்வது
அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருப்பவர்களே, இந்த விஷயத்தில் பிரிந்து இருக்கிறார்களாம். ஒருமித்த கருத்தாக இதை செய்வோம், இப்படி செய்தால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும் என இணையாமல் இருக்கிறார்களாம். இதற்கு மத்தியில், கொரோனாவுக்காக இன்னொரு ஊக்கத் தொகை திட்டத்தை வேறு அறிவிக்க இருக்கிறது காங்கிரஸ்.
தெரியவில்லை
இந்த இரண்டாவது கொரோனா வைரஸ் ஊக்குவிப்பு மற்றும் உதவித் திட்டங்களிலாவது, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தொடர்பாக ஏதாவது திட்டங்களை அறிவிப்பார்களா? எனத் தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் இந்த திட்டத்தை இன்னும் கொஞ்சம் உந்தித் தள்ளி விரைவில் கொண்டு வர வேண்டி இருக்கிறது.
தேர்தல்
அமெரிக்காவில் இந்த ஆண்டு தேர்தல் வேறு நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் காலத்தில் சீனா எதிர்ப்பு உணர்வும், அமெரிக்க வேலை வாய்ப்புகளுக்கு சாதகமான நாவடிக்கைகளும் வாக்குகளை அல்ல உதவுல் எனலாம். ஆனால், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு, மக்கள் வரிப் பணத்தை வரிச் சலுகைகளாகக் கொடுப்பது எடுபடுமா? எனத் தெரியவில்லை. எல்லாம் ட்ரம்புக்கு தான் வெளிச்சம்.