வாஷிங்டன்: கார்ப்பரேட் பணியாளர்களுக்கான எல்-1பி விசா வழங்குவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்திய ஐடி நிறுவனங்கள் இத்தகைய தளர்வுகளின் மூலம் எளிதாக தங்களின் பணியாளர்களை அமெரிக்க அலுவலகத்தில் பணியில் அமர்த்த முடியும்.
ஐடித்துறை மட்டும் அல்லாமல் பிற துறையை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இதன் மூலம் அதிகளவிலான பலன் அடையும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு
எல்-1பி விசா பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்ததால், அமெரிக்க அரசு இத்தகைய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும் விசா சலுகை அளிப்பதால் அன்னிய முதலீடு அதிகளவில் கவர முடியும் என அமெரிக்க அரசு நம்புகிறது.
பராக் ஒபாமா
கார்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்க அமெரிக்க அரசு செலக்ட் யுஎஸ்ஏ என்ற ஒரு சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, "கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான வகையில் அமெரிக்காவில் தங்களது பணியாளர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்த உதவும் எல்-1பி விசாவில் தளர்வுகளை அளிக்க எனது சிறப்புக் குழு பணியாற்றி வருகிறது." என தெரிவித்தார். இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரும் எனவும் ஒபாமா தெரிவித்தார்.
இந்திய நிறுவனங்கள்
செலக்ட் யுஎஸ்ஏ கூட்டத்தில் ஏராளாமான இந்திய நிறுவனங்கள் கலந்துக்கொண்டது. இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி அதிகரிக்கவும், முதலீடு செய்யவும் ஆர்வமாக உள்ளது, இதன் மூலம் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும்.
ஐடி நிறுவனங்கள்
எல்-1பி விசாவில் அளிக்கப்படும் தளர்வுகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் அதிகளவிலான நன்மை அளிக்க உள்ளது. இதன் மூலம் பணி நிமித்தமாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்த 3 வருடத்தில் இரட்டிப்பு ஆகும்.
மேக் இன் இந்தியா
மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் ஒபாமாவை கவர்ந்துள்ளதாக தெரிகிறது, இதன் வெளிப்பாடே செலக்ட் யுஎஸ்ஏ கூட்டம்.