சர்வதேச முதலீட்டு சந்தை மொத்தமும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின்பு இன்று முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது ஜெரோம் பவல் தலைமையிலான நாணய கொள்கை கூட்டம்.
அமெரிக்காவின் பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் தற்போது 1980ஆம் ஆண்டுக்குப் பின்பு 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதனால் விலைவாசி உயர்வு மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு சந்தை, வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி எனச் சங்கிலி தொடராகப் பல பாதிப்புகள் உருவாகி வருகிறது.
பெடரல் ரிசர்வ்
இந்நிலையில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் முக்கியமான முடிவை எடுத்தாக வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது ஜெரோம் பவல் தலைமையிலான கூட்டம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் கடந்த சில நாணய கொள்கை கூட்டங்களில் வட்டியை உயர்த்த முயற்சி செய்து கடைசியில் பின்வாங்கிய நிலையில், இக்கூட்டத்தில் 7 சதவீதம் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தில் கட்டாயம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெரோம் பவல்
புதன்கிழமை நடந்து முடிந்த கூட்டத்தில் ஜெரோம் பவல் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை, ஆனால் மார்ச் மாதம் முதல் கட்டாயம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மார்ச் மாதம் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் விகித இலக்கு
மேலும் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இலக்கான 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதைக் குறைக்கப் பிப்ரவரி மாதம் வெறும் 30 பில்லியன் டாலருக்கு பத்திர கொள்முதலும், மார்ச் மாதத்தில் இருந்து பத்திர கொள்முதலை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.
பத்திர கொள்முதல்
பணப்புழக்கத்தைக் குறைக்கப் பத்திர கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ள அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் treasury security holdings பிரிவுக்கு மாதம் 20 பில்லியன் டாலரும், mortgage-backed securities பரிவில் மாதம் 10 பில்லியன் டாலர் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது.
பேலென்ஸ் ஷீட்
அமெரிக்காவின் பணவீக்கத்தை உடனடியாகக் குறைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், அமெரிக்காவின் பேலென்ஸ் ஷீட் தேவைக்கு அதிகமாகவே இருக்கும் காரணத்தால் தற்போது பணபுழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.
மார்ச் மாதம்
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மார்ச் மாதத்தில் அறிவிக்க இருக்கும் வட்டி விகிதம் 2018க்குப் பின் முதல் முறையாகச் செய்யப்பட உள்ளது. இந்த வட்டி விகித உயர்வு சர்வதேச முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.